காஷ்மீர் கலவரத்தில் அப்பாவி மக்கள் பாதிப்பு.. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் அமளி.. ராஜ்நாத்சிங் பதில்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்கள் ராணுவத்தால் தாக்கப்பட்டதாக ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை கிளப்பின. நாளை விவாதிக்க தயார் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதையடுத்து, அரசுக்கு எதிராக அம்மாநிலத்தில் குறிப்பிட்ட அளவு மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
வன்முறையை அடக்க பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டனர். அப்போதே தடை செய்யப்பட்ட பெல்லட் குண்டுகளை கொண்டு பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி கலவரத்தை ஒடுக்கியதாக அங்குள்ள சில பத்திரிகையாளர்களும், எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டுகிறார்கள்.
காஷ்மீர் கலவரம் பற்றி விவாதிக்க கோரிக்கைவிடுத்து காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் ராஜ்யசபாவில் இன்று அமளியில் ஈடுபட்டனர். 2 நாட்கள் முன்பே நோட்டீஸ் கொடுத்தும் விவாதிக்க அனுமதி கிடைக்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் அதிருப்தி வெளிப்படுத்தினார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், காஷ்மீர் விஷயம் மிகவும் சீரியசானது. அதுபற்றி விவாதிக்க தயாராக உள்ளோம். நாளை காலை 11 மணிக்கு விவாதம் நடத்தலாம் என்றார்.