3 மகள், ஒரு மகன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை - பெங்களூருவில் பரிதாபம்
பெங்களூரு: பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு, மைசூரு ரோடு பகுதியிலுள்ள நாகரபாவி-எம்.பி.எம். லே அவுட்டைச் சேர்ந்தவர் கங்கா ஹனுமைய்யா (57) . பி.எஸ்.என்.எல். ஊழியரான இவரது மனைவி பெயர் ஜெயலக்ஷம்மா (54 ). இத்தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன்.

இவர்களில் மூத்த மகள் ஹேமலதா (30) பொறியாளராகவும், இரண்டாவது மகள் விமலா (28) ரயில்வேயிலும் பணி புரிந்து வந்தனர். மூன்றாவது மகன் யாதிஷ் (26) வேலை தேடிக் கொண்டிருந்தார். கடைசி மகள் நேத்ராவதி (24) பொறியியல் கல்லூரி மாணவி.

இந்நிலையில், இன்று அவர்களது வீட்டில் ஆள் நடமாட்டமே இல்லாது இருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தார் சந்தேகமடைந்தனர். திறந்திருந்த ஜன்னல் வழியே வீட்டிற்குள் பார்த்த போது, ஒருவர் தூக்கில் தொங்குவது கண்டுபிடிக்கப் பட்டது. உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவைத் திறந்து பார்த்த போது, வீட்டில் உள்ள அனைவருமே தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப் பட்டது.

அதனைத் தொடர்ந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே சோகம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications