கேரளாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 குழந்தைகள் பலி! விடுமுறையை கழிக்க சென்றபோது சோகம்!
கேரளா அருகே ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
திருவனந்தபுரம்: கேரளா மலப்புரத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
அண்மையில் வங்கக்கடலில் உருவான ஒகி புயல் தென் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஆட்டிப்படைத்தது. இதில் இரு மாநிலங்களும் பலத்த சேதமடைந்தன.
மீனவர்கள் பலரும் உயிரிழந்தனர். இன்னும் பலர் கரை திரும்பாமல் உள்ளனர். இந்த சோகத்தில இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒரு சோகம் அரங்கேறியுள்ளது.

விடுமறையை கழிக்க..
மலப்புரம் மாவட்டத்தில் மாப்பில்லக்கல் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதன். விடுமுறையை கொண்டாட இவரது வீட்டிற்கு உறவுக்கார குழந்தைகள் வந்திருந்தனர்.

மீன்பிடி படகில் பயணம்
இதையடுத்து விடுமுறையை கொண்டாடும் வகையில் வேலாயுதன் தனது உறவுக்கார குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது மீன்பிடி படகில் நாரணிபுழா ஆற்றுக்கு சென்றுள்ளார். அப்போது படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது.

6 குழந்தைகள் பலி
கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஆற்றில் படகு மூழ்கியது. இதில் 4 பெண் குழந்தைகள் உட்பட் 6 குழந்தைகள் உயிரிழந்தனர்.

இருவர் உயிருடன் மீட்பு
அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு சிறுமி மற்றும் ஒரு முதியவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கு காரணம்
படகில் மேலும் பலர் பயணித்தனரா என தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது. குழந்தைகள் ஒரு பக்கமாக படகில் நின்றதே விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications