'தேச பாதுகாப்பு' - உங்க குடும்பத்துக்கு குத்தகைக்கு விட்டாச்சா மிஸ்டர் அஜித் தோவல்?
டெல்லி: அரசியல் களத்தில்தான் மட்டுமின்றி அதிகார வர்க்கங்களிலும் வாரிசு நோய் பீடித்திருப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வைத்திருக்கிறது. நாட்டின் தேச பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் பதவியேற்ற பின்னர் அவரது மகன் 'நாட்டின் பாதுகாப்பு' குறித்த கருத்தரங்குகளை நடத்துவதில் ரொம்பவும் பிசியாகிவிட்டார்.. இதை நமது மத்திய சர்க்கார் மந்திரிபிரதானிகளும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் வேதனையானது.
உயரிய பதவிகளை பிடித்துவிடுகிற அரசியல்வாதிகளின் அளப்பரைகள்தான் சொல்லி மாளாதது.. அதே நேரத்தில் மத்திய உளவுத் துறை, தேசப் பாதுகாப்பு ஆலோசகர், வெளிநாட்டு கொள்கை வகுப்பான ராவின் தலைவர் போன்ற அதிமுக்கியம் வாய்ந்த பதவிகளில் இருப்போர் இருக்கிற இடம்தெரியாமல் பதவி வகித்துவிட்டு ஓய்வு பெற்று ஓய்ந்து போய்விடுவது வழக்கம்.
இதில் விதிவிலக்காக இருந்தவர் எம்.கே. நாராயணன். மத்திய உளவுத் துறை தலைவராக இருந்த போது 1990ல் தி.மு.க. ஆட்சியை கலைக்க காரணமாக இருந்தார்; பின் ராஜிவ் கொலை வழக்கு வீடியோ மறைத்தார் என்ற சர்ச்சையில் சிக்கினார். ஆனால் காங்கிரஸ் கட்சியுடனான நெருக்கத்தால் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் ஆனார்.. இத்தனை உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட ஆளுநராகவும் பதவி வகித்தார். ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல் வழக்கில் சிக்க நேரிட்ட நிலையில் வேறுவழியின்றி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணன்.
தற்போது இந்த பட்டியலில் இணைந்திருப்பவர் தேச பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். இவரும் இவரது குடும்பத்தினரும் ஏதோ நாட்டின் பாதுகாப்பையே குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல பயங்கரவாதம், தேச பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்குகளை அடிக்கடி தங்களது 'தொண்டு நிறுவனங்கள்' மூலம் நடத்தி வருகின்றனர்.
அதாவது அஜித் தோவலின் மகன் ஷார்யா தேவல், இந்தியா பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளராக இருந்தவரும் தற்போதைய பாரதிய ஜனதாவின் தேசிய பொதுச்செயலருமான ராம் மாதவ், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, பாஜக துணைத் தலைவ ர்வினய் சகஸ்ரபுதே ஆகியோர் இயக்குநர்கள்.
இந்த அமைப்பு அண்மையில் கோவாவில் பாதுகாப்பு தொடர்பாக ஒரு கருத்தரங்கை நடத்தியது. தற்போது ராஜஸ்தானின் ஜோத்பூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு பயங்கரவாதம் தொடர்பான ஒரு பிரம்மாண்ட மாநாட்டை நடத்துகிறது. இம்மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், மனோகர் பாரிக்கர், கிர்ரென் ரிஜ்ஜூ, வி.கே.சிங், நிர்மலா சீதாராமன், ராவ் இந்தர்ஜித் சிங், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராஜே சிந்தியா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பாதுகாப்பு வல்லுநர்களும் இக்கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். பூடான் பிரதமர் டோப்கே, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, பாகிஸ்தானின் எழுத்தாளர் அயீஸ் சித்திக், ஊடகவியலாளர் ரஹிமுல்லா யூசுஃப்ஜாய், ஆப்கானின் அம்ருல்லா சலே ஆகியோரும் இதில் கலந்து கொள்கிண்றனர்.
இந்நிகழ்வுக்கு முன்பாக நேற்று இரவு அஜித் தோவல் விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அஜித் தோவலும் அவரது மகனும் நடத்துகிற இம்மாநாடு ஒருநாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது.. மிக உயரிய பதவிகளை வகிக்கும் அஜித் தோவல் போன்றவர்கள் தங்களது மகன்கள் லாபமடைவதற்காக இப்படி தன்னார்வ தொண்டு நிறுவனங்களை உருவாக்கி நாட்டின் பாதுகாப்பு குறித்து பகிரங்கமாக விவாதிப்பதெல்லாம் என்ன மாதிரியான தேச பாதுகாப்போ?
ஆனால் தெருக்கோடி முனையில் நின்று கொண்டு எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் உரிமை கொடு என்று பேசினால் தேச விரோதி; தேசதுரோகி என தேசபாதுகாப்பு சட்டம் பாயும்!