கர்நாடக சட்டசபை, ராஜ் பவனுக்கு விசிட் அடித்த பாம்புகள்: பதறி ஓடிய ஊழியர்கள்
பெங்களூர்: கர்நாடக சட்டசபையான விதான் சவுதா மற்றும் ராஜ் பவனில் நேற்று இரண்டு பாம்புகள் பிடிக்கப்பட்டன.
கர்நாடக சட்டசபை பெங்களூரில் உள்ள விதான் சவுதா கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 3.15 மணிக்கு விதான் சவுதாவின் இரண்டாவது மாடியில் உள்ள அறை எண் 214(ஏ)க்குள் 5 அடி பாம்பு ஒன்று புகுந்தது. இதைப் பார்த்த ஊழியர்கள் கூச்சலிட்டனர். சட்டசபை மார்ஷல் எஸ்பி பந்திவாத்தின் மேஜைக்கு கீழே பாம்பு இருந்தது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் வந்து அதை பிடித்தனர். இதே போன்று ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் உள்ள கண்ணாடி மாளிக்கைக்கு பின்புறம் 4 அடி பாம்பு ஒன்று இருந்தது. அதை வனத்துறையினர் பிடித்தனர். இந்த சம்பவம் நடந்தபோது ஆளுநர் பரத்வாஜ் மாளிகையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இரண்டு பாம்புகளும் பன்னேர்கட்டா காட்டுப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டன. பெங்களூரில் மழை பெய்து வருவதால் சூடான இடம் தேடி பாம்புகள் வந்திருக்கும் என்று வனத்துறை அதிகாரி கே. மோகன் தெரிவித்தார்.