திரும்ப வந்துட்டேன்... ஜன.30ம் தேதி உண்ணாவிரதம்.. அன்னா ஹசாரே அறிவிப்பு
அகமதுநகர் : மகாராஷ்டிராவில், லோக்பால் சட்டத்தின் கீழ் ஊழல் தடுப்பு ஆணையரை நியமிக்கவில்லை என்று மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை வரும் 30ம் தேதி தொடங்க உள்ளதாக சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே அறிவித்து உள்ளார்.
கிசான் பாபுராவ் ஹசாரே என்ற இயற்பெயர் கொண்டு, பிற்பாடு அன்னா ஹசாரேவாக மாறிய பிரபல சமூக ஆர்வலரான அவர் லோக்பால் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து அனைவரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர்.
அவருடன் இணைந்து கைகோர்த்த அர்விந்த் கெஜ்ரிவால் தலைநகர் டெல்லியின் முதலமைச்சரானார். அதன் பின்னர் கொஞ்ச காலம் பரபரப்பு இல்லாமல் காணப்பட்ட அன்னா ஹசாரே தற்போது தமது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க போவதாக அறிவித்திருக்கிறார்.
இம்முறை அவர் உண்ணாவிரத போராட்டத்துக்கு அறிவித்துள்ள காரணம், மகாராஷ்டிராவில், லோக்பால் சட்டத்தின் கீழ் ஊழல் தடுப்பு ஆணையரை நியமிக்கவில்லை என்பதாகும். இது தொடர்பாக அவர் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிசுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில், மகாராஷ்டிரா அரசாங்கம் லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தை 2014 ஆம் ஆண்டு அமல்படுத்துவதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தில் இருந்த போதிலும், பிரதமர் மோடி அரசாங்கம் லோக்பால், லோகாயுக்தாக்களை நியமிப்பதில்லை.
லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்றும் எண்ணம் தற்போதைய அரசுக்கு இல்லை. எனவே,இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30ம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார் ஹசாரே.