சொராபுதீன் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கு: அமித்ஷா விடுதலைக்கு எதிரான மனு டிஸ்மிஸ்!
டெல்லி: சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் இருந்து பாஜக தலைவர் அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
2005-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் சொராபுதீனுக்குத் தொடர்பு உள்ளது என்றும், அப்போதைய குஜராத் முதல்வர் மோடி உட்பட முக்கிய அரசியல் தலைவர்களைப் படுகொலை செய்ய அவர் திட்டமிட்டிருந்தார் எனவும் குஜராத் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், பேருந்தில் சென்று கொண்டிருந்த சொராபுதீனையும், அவரது மனைவியையும் போலீஸார் கடத்தினர். பின்னர் சுட்டுக் கொன்றனர். இது போலி என்கவுன்ட்டர் என சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான துளசி பிரஜாபதி 2006-ம் ஆண்டு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதேநேரத்தில் போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓட முயன்ற போது துளசி பிரஜாதிபதியை சுட்டுக் கொன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த இரு கொலை வழக்குகளிலும் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு இருந்தது என சிபிஐ குற்றம்சாட்டியது. இதனால் அமித்ஷா கடந்த 2010-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
பின்னர் குற்றச்சாட்டு காரணமாக அப்போதைய முதல்வர் மோடியின் அமைச்சரவையிலிருந்து அமித்ஷா பதவி விலகினார். இவ்வழக்கு 2012-ம் ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிவில் இந்த கொலைகளுக்கும் அமித்ஷாவுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறிய மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம், அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
மும்பை உயர் நீதிமன்றமும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து அமித் ஷாவை விடுவித்தது. இதையடுத்து போலி என்கவுண்டர் வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அதிகாரியும் சமூக ஆர்வலருமான ஹர்ஷ் மந்தேர் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த வழக்கில் வாதம் நீடித்தது. இறுதியில் அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications