காங்கிரஸ் கட்சிக்குள் பாஜகவின் பி டீம்.. குஜராத் கூட்டத்தில் கட்சியினரை வெளுத்தெடுத்த ராகுல் காந்தி!
அகமதாபாத்: காங்கிரஸ் கட்சிக்குள் இருந்துகொண்டு பாஜகவுக்காக வேலை செய்பவர்களை வெளியேற்ற இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சித் தொண்டர்களிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய ராகுல் காந்தி, "குஜராத் மக்களுடன் ஓர் உறவை ஏற்படுத்த கட்சி முடிவு செய்துள்ளது. குஜராத் மாநிலம் வளர்ச்சியை விரும்புகிறது.

ஆனால் அங்குள்ள காங்கிரஸால் அதற்கு வழிகாட்ட முடியவில்லை. கடந்த 20 - 30 ஆண்டுகளாக குஜராத் மக்கள் எதிர்பார்த்த எதையும் காங்கிரஸ் கட்சியால் நிறைவேற்ற முடியவில்லை.
இதன் பதில் என்னவென்றால், கட்சிக்குள் இரு வகையான தலைவர்கள் இருக்கின்றனர். ஒன்று, பொதுமக்களுடன் நின்று அவர்களுக்காக போராடுபவர்கள். மற்றொரு வகையினர் மக்களை மதிக்காமல் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறவர்கள். கட்சியின் இந்த இரு குழுக்களையும் பிரிப்பதுதான் எனது வேலை.
காங்கிரசில் தலைவர்களுக்கு பஞ்சமில்லை. எங்களது மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான தலைவர்கள் ஆசிய சிங்கங்கள். ஆனால் அவர்களிடம் பின்புறத்திலிருந்து ஒரு சங்கிலி பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது. எதிர்ப்பாளர்களுக்கு கதவைத் திறந்து விட வேண்டிய நேரம் இது.
இருபது பேரோ முப்பது பேரோ இருந்தாலும் பரவாயில்லை; அவர்களைக் கண்டிப்பாக வெளியேற்றுவோம். இதனைச் செய்வதன் மூலம் குஜராத் மக்களுக்கு காங்கிரஸ் மீதான நம்பிக்கையும் கூடும். கட்சிக்குள் இருந்தவாறு பாஜகவுக்கு வேலை செய்தால், கண்டிப்பாக அந்தக் கட்சிக்கே அனுப்பப்படுவீர்கள்.
ஆனால், அந்தக் கட்சியில் உங்களை ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இங்குள்ளவர்களின் நரம்புகளில் காங்கிரஸ் ரத்தம்தான் இருக்க வேண்டும். காங்கிரஸை எதிர்க்கட்சியாகத்தான் குஜராத் மக்கள் விரும்புகின்றனர்; பாஜகவின் பி டீமாக அல்ல.
குஜராத்தில் எதிர்க்கட்சிக்கு 40 சதவீத வாக்குகள் உள்ளன என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் இங்கு ஒரு சிறிய எதிர்க்கட்சி அல்ல. குஜராத்தின் எந்தப் பகுதியிலும், நமக்கு இரண்டு பேர் இருப்பார்கள், அதில் ஒருவர் பாஜகவை ஆதரிப்பார், மற்றவர் காங்கிரஸை ஆதரிப்பார். ஆனால் எங்கள் மனதில், காங்கிரஸ் கட்சிக்கு பலம் இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம்.
எங்கள் வாக்குகள் வெறும் 5 சதவீதம் அதிகரித்தால், அது போதுமானதாக இருக்கும். தெலுங்கானாவில், எங்கள் வாக்கு சதவீதத்தை 22 சதவீதம் அதிகரித்தோம், இங்கு எங்களுக்கு 5 சதவீதம் மட்டுமே தேவை. ஆனால் இந்த இரண்டு குழுக்களையும் பிரித்து சல்லடை போடாமல் இந்த 5 சதவீதத்தைப் பெற முடியாது." என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications