"யாரையும் விட மாட்டேன்!" வங்கத்தில் குழந்தைகள் உட்பட 8 பெண்கள் உயிருடன் எரித்து கொலை! பாயும் மம்தா
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பிர்பூம் என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 8 பேர் கொடூர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் காட்டும் வகையிலேயே இந்தச் சம்பவம் அமைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

மேற்கு வங்கம்
இந்தச் சூழலில் பிர்பூம் அருகே உள்ள கிராமத்திற்குச் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அங்குக் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், கொலையாளிகள் சரணடையாவிட்டால் அவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என்றும் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்தார். இந்த கொலை சம்பவத்தை அங்குள்ள பாஜக கையில் எடுத்துள்ள நிலையில், இந்தச் சம்பவத்தில் எதோ ஒரு மிகப் பெரிய விஷயம் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் இதில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மம்தா பானர்ஜி
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மேற்கு வங்கத்தில் இப்படியொரு காட்டுமிராண்டித்தனம் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. தாய்மார்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டு உள்ளனர். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இறந்தனர், இந்தச் சம்பவத்தைக் கேட்டதும் எனது இதயமே நொறுங்கிவிட்டது. இந்த படுகொலைக்குக் காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்" என்று குறிப்பிட்டார். மேலும், அந்த இடத்திலேயே போலீசார் அழைத்து, அடுத்து எடுக்க வேண்டி நடவடிக்கை குறித்தும் அறிவுரை வழங்கினார்.

இழப்பீடு
மம்தா பானர்ஜி மேலும் கூறுகையில், "குற்றவாளிகளைத் தப்பிக்க விட மாட்டோம். அவர்கள் அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். இந்தச் சம்பவம் குறித்து யார் வேண்டுமானாலும் சாட்சியம் அளிக்கலாம். சாட்சிகளுக்கு முறையான பாதுகாப்பு அளிக்கப்படும். வீடுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ₹ 2 லட்சம் இழப்பீடாக அளிக்கப்படும்" என்றும் அவர் அறிவித்தார். மேலும், இந்த படுகொலை சம்பவத்தில் தங்கள் உறவினர்கள், அக்கம் பக்கத்தினரை இழந்தவர்கள் உடனும் அவர் உரையாடினார்.

அரசியல் பழிவாங்கல்
இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான் அப்பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பாது ஷேக் பெட்ரோல் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக ராம்பூர்ஹாட் நகருக்கு அருகிலுள்ள போக்டுய் கிராமத்தில் இந்த கும்பல் ஆறு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளை அவர்கள் வீட்டிலேயே அடைத்து எரித்துள்ளனர்.

யார் காரணம்
பலரும் அங்குள்ள திரிணாமுல் தலைவர் அனருல் ஷேக்கை தான் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவராகக் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அனைவருமே அனருல் ஷேக் தான் தாக்குதலை நடத்தியதாகவும் அவருடன் இருந்தவர்கள் தான் வீடுகளுக்கு தீ வைத்ததாகவும் தெரிவித்தனர். இந்த கொடூர சம்பவத்தில் கட்சி பேதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா உறுதி அளித்துள்ளார். திரிணாமுல் நிர்வாகி கொலை, அப்பகுதி மக்கள் கொலை என மொத்தம் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடப்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications