ஆப்பிரிக்க பெண்களை அவமானப்படுத்திய விவகாரம்: டெல்லி சட்ட அமைச்சர், ஆதரவாளர்கள் மீது வழக்கு

டெல்லி மால்வியா நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சோம்நாத் பாரதி. அவர் தான் டெல்லியின் சட்ட அமைச்சராக உள்ளார்.
அவர், தனது ஆதரவாளர்களுடன் கடந்த புதன்கிழமை இரவு கிர்கி எக்ஸ்டென்ஷனுக்கு சென்று உகாண்டாவைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த 2 பெண்கள் என்று மொத்தம் 4 ஆப்பிரிக்க பெண்களை பிடித்து அவர்கள் விபச்சராம் செய்வதுடன் போதைப் பொருள் விற்பதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து அந்த பெண்கள் போலீசில் அளித்த புகாரில், சோம்நாத் பாரதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நள்ளிரவில் எங்கள் வீட்டுக்குள் புகுந்து எங்களை தாக்கி, அசிங்கமாக பேசினர் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எங்களை வலுக்கட்டாயமாக பரிசோதனைக்கு உட்படுத்தினர். கழிவறையை பயன்படுத்த அனுமதித்தால் நாங்கள் தப்பிவிடுவோம் என்று அமைச்சரின் ஆட்கள் கூறினர். இதனால் பொது இடத்தில் எங்களை சிறுநீர் கழிக்கச் செய்தனர் என்றனர்.
இந்த விவகாரம் குறித்து உடனே வழக்குப் பதிவு செய்யுமாறு சகேத் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டதையடுத்து சோம்நாத் பாரதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது பெண்களிடம் அத்துமீறியது, இரண்டு அமைப்புகள் அல்லது மதங்களுக்கு இடையே விரோதத்தை தூண்டிவிடுவது, கலகம் செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications