நாங்கள் செய்தது கலகமென்றால், 1984, 2002ல் நடந்தது...?: பிரணாப்புக்கு ஆம் ஆத்மி கேள்வி
கடந்த வாரம், டெல்லி போலீஸ் துறையை, டெல்லி மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றக்கோரியும், குற்றம் சாட்டப் பட்ட சில போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியின் பிரதான சாலையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டம் கிட்டத்தட்ட 30 மணி நேரங்களுக்கும் மேலாக நீடித்தது. இதனால், இந்தியாவின் தலைநகரமே ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப் பட்டது.
பின்னர், துணை நிலை ஆளுநர் அளித்த உறுதிமொழியை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், கடந்த 25-ந் தேதி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு ஆற்றிய குடியரசு தின உரையில், ‘விளம்பரம் தேடும் நோக்கத்தில் நடத்தப்படும் கலகங்கள், ஆட்சி திறன் ஆகாது' என அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டத்தை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார்.
குடியரசுத் தலைவரின் இந்த விமர்சனத்திற்கு தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ‘ஆம் ஆத்மி' கட்சியை சேர்ந்தவரும், டெல்லி சட்டஅமைச்சருமான சோம்நாத் பார்தி தனது‘டுவிட்டர்' வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ‘ஆம் ஆத்மியின் செயல்கள் கலகம் என்றால், ‘1984 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்களை ஜனாதிபதி என்னவென்று சொல்வார்? போராட்டங்கள் என்றா? நல்ல ஜோக், குடியரசுத் தலைவர் அவர்களே' எனத் தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில், குடியரசுத்தலைவரை சட்ட அமைச்சர் விமர்சித்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் கூறுகையில், ‘ குடியரசுத்தலைவர் ஒரு ராஜதந்திரி. அவரது கருத்து, எல்லோருக்கும் வழிகாட்டும். அவரது கருத்தை விமர்சிப்பது முறையல்ல' எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த டுவிட்டர் பதிவை சில மணி நேரங்களிலேயே அழித்து விட்டார் சோம்நாத் பார்தி. மேலும், தான் வலைத்தளத்தில் எதுவும் கூறவில்லை என அவர் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.