குடித்து விட்டு சித்ரவதை செய்வதாக போலீசில் புகார் அளித்த 11 வயது மகன்... அப்பா கைது!
தெலுங்கானாவில் போதையில் அடித்த அப்பா மீது மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கரீம்நகர்: தெலுங்கானாவில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக 11 வயது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ளது ஜம்மிகுண்டா. இங்குள்ள காவல் நிலையத்தில் நேற்று வந்த 11 வயது சிறுவன் சசிகுமார், தனது தந்தை மீது எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை அளித்தான்.

அதில், தனது தந்தை தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாகவும், இது தொடர்பாக சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சசி கோரிக்கை விடுத்திருந்தான்.
இந்த புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார், அவனது தந்தை சீனிவாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சீனிவாஸ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனத் தெரிய வந்தது.
மேலும், தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வரும் சீனிவாஸ் தனது மனைவியையும், மகனையும் சண்டையிட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல குடிபோதையில் வந்த சீனிவாஸ், மனைவியுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுவன் சசி மீது அவர் மிளகாய்ப்பொடியை அள்ளி வீசியுள்ளார்.
நாளுக்கு நாள் சீனிவாஸின் சித்ரவதை அதிகமாவதை உணர்ந்த சசி, நேற்று தனது தந்தை மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
தற்போது சீனிவாஸ் மீது இபிகோ 324, 342 மற்றும் 506 உள்ளிட்ட பிரிவுகளின் கீழும், குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டப்பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சீனிவாஸ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தந்தையின் தாக்குதலால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சசி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
பொதுவாக மகளுக்கு தந்தை பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக வரும் புகார்கள் தான் அதிகம். இப்படி தந்தை தன்னை துன்புறுத்துவதாக புகார் கொடுத்துள்ளது அரிய வழக்கு என போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications