2-வது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி இன்று வீடு திரும்பினார்
டெல்லி: இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று வீடு திரும்பினார்.
உத்திரப் பிரதேச மாநிலம், வாராணசி தொகுதியில் கடந்த 2-ஆம் தேதி காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற சோனியா காந்திக்கு காய்ச்சலும், இடது தோள்பட்டையில் காயமும் ஏற்பட்டது. திடீர் உடல் நலக் குறைவு காரணமாக பிரச்சாரத்தை பாதியிலேயே ரத்து செய்த சோனியா காந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

முதற்கட்ட பரிசோதனைக்குப் பின்னர் அவர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சுமார் 11 நாள்கள் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டது. இதனிடையே சோனியாகாந்திக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் தேறிய அவர், வீடு திரும்பினார்.
இந்நிலையில், அறுவை சிகிச்சை குறித்து பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு புதன்கிழமை அவர் சென்றார். அவரது உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து 2 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சோனியா காந்தி, இன்று வீடு திரும்பினார்.
அடுத்த முறை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வரும்வரை அவர் பூரண ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications