சோனியா தலைமையில் மன்மோகனுக்கு ‘ஃபேர்வெல்’ பார்ட்டி!
டெல்லி: மன்மோகன் சிங்கிற்கான பிரிவு உபச்சார விழா விருந்திற்கு வரும் 14-ந் தேதியன்று ஏற்பாடு செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி.
16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்து வருகிறது. நாளை கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 16ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் ஒரே கட்டமாக எண்ணப்படுகின்றன. அன்று அல்லது அதற்கு மறுநாள் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி விடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
எனவே, தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவி விலகல் கடிதத்தை வரும் 17ம் தேதி குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பார் எனத் தெரிகிறது.
இதனால், வரும் 14ம் தேதி காங்கிரஸ் கட்சிச் சார்பில் மன்மோகன் சிங்கிற்கு பிரிவு உபச்சார விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த விருந்து நிகழ்ச்சியில், மன்மோகன் சிங்கிற்கு நினைவுக் கேடயம் வழங்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அன்று மாலை மன்மோகன் சிங், தொலைக்காட்சி வாயிலாக தனது பிரிவு உரையை மக்களிடம் ஆற்ற இருக்கிறார்.