ராகுலை வைத்து நாடகம் போடும் சோனியா: அத்வானி
டெல்லி: கிரிமினல் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பை தடுக்கும் அவசர சட்டத்தை எதிர்க்குமாறு ராகுலுக்கு ஆலோசனை சொன்னதே சோனியா தான். இதன் மூலம் பிரதமரை ராகுல் அவமதித்துவிட்டார் என பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.
குற்ற வழக்குகளில் இரண்டாண்டு தண்டனை பெற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கலாம் என கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை முடக்கும் வகையில் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் எதிர்த்து பேட்டியளித்தார். அவசர சட்டத்தை நான்சென்ஸ் என்றும் அதை கிழித்து எறியவேண்டும் என்று கடும் சொற்களை பயன்படுத்தினார்.

ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் பதவி விலகவேண்டும் என்றும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தெரிவித்தனர். இதையடுத்து மத்திய அரசு அவசர சட்டத்தை வாபஸ் பெற்றது.
அவரச சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, பின்னர் திரும்ப பெறப்பட்டது போன்ற பஞ்சாயத்துக்கள் குறித்து பாஜக மூத்த தலைவர் அத்வானி தனது டுவீட்டரில் கருத்து கூறியுள்ளார்.
சோனியாவின் ஆலோசனை
அவசர சட்டத்தை எதிர்த்து கருத்து தெரிவிக்குமாறு ராகுலுக்கு ஆலோசனை கூறியதே சோனியா தான். நாங்கள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தரக்கூடாது என வலியுறுத்திய பிறகு தான், சோனியா, ராகுலை வைத்து அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
கடந்த செப்டம்பர் 24-ம் தேதி அமைச்சரவை , அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய போது, தனது எதிர்ப்பை காட்டாத ராகுல், திடீரென அவசர சட்டம் ஒரு ‘நான்சென்ஸ்' என கருத்து தெரிவித்தது ஏன்?
ஜனாதிபதியும் காரணம்
இதன் மூலம் ராகுல் பிரதமரை மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்கு கூட்டணியையும் அவமதித்துவிட்டார். ராகுல் செயல்பாட்டில் சோனியாவிற்கும் பங்குண்டு. இச்சட்டம் திரும்ப பெறப்பட்டதற்கு ஜனாதிபதியும் ஒரு காரணம் என்றும் அத்வானி கருத்து கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications