2011-12-ல் நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்ய முயற்சித்தார் சோனியா... சு.சுவாமி திடுக் தகவல்
திருவனந்தபுரம்: இந்துத்துவா தீவிரவாதத்தைக் காரணம் காட்டி 2011-12ஆம் ஆண்டில் நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முயற்சித்ததாக பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:
2011-12-ம் ஆண்டில் இந்தியாவில் எமர்ஜென்சியை கொண்டுவர சோனியா காந்தி திட்டமிட்டார். அப்போது இந்துத்துவா தீவிரவாதத்தை காரணம் காட்டி இதை அமுல்படுத்த நினைத்தார்.
சோனியா திட்டம் நிறைவேறவில்லை
ஆனால் ராணுவ தளபதியாக இருந்த வி.கே.சிங் அவரது திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் இந்துத்துவா தீவிரவாதம் என சித்தரிக்கும் சோனியாவின் திட்டம் நிறைவேறவில்லை.
திகாரில்தான் காரிய கமிட்டி கூட்டம்
காங்கிரஸ் மீதான ஊழல் புகார்களுக்காக அவர்கள் குடும்பத்துடன் ஜெயிலுக்கு செல்வார்கள். திகார் சிறையில்தான் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடக்கும்.
சுனந்தா மர்ம மரணம்
சுனந்தா புஷ்கர் இயற்கையாக மரணம் அடையவில்லை. இதில் சசிதரூரை குற்றம் சொல்லவில்லை. ஆனால் யார் சுனந்தாவை கொன்றார்கள் என்பது சசிதரூருக்கு கண்டிப்பாக தெரியும்.
வேறு இடத்தில் பாபர் மசூதி
அயோத்தியில் ராமர் கோவிலும், பாபர் மசூதியும் ஒன்று சேர்ந்து இருப்பது சாத்தியமில்லை. எனவே அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் இந்துக்கள் ராமருக்கு கோவில் கட்ட முஸ்லிம்கள் அனுமதிக்க வேண்டும். அதே போல் சராயு நதியின் மறுபக்கத்தில் ராமர் கோவில் அளவுக்கு சரிசமான நிலத்தில் பாபர் மசூதி கட்டிக் கொள்ளலாம்.
இதற்கு கிருஷ்ணனின் சமரச திட்டம் என நான் பெயரிட்டு உள்ளேன். மகாபாரத்தில் பாண்டவர்களுக்கு 5 கிராமங்களாவது கொடுங்கள் என்று கவுரவர்களுக்கு யோசனை சொன்னார். நான் முஸ்லிம்களிடம் குறைந்தது 3 கோவில்களையாவது திரும்ப கட்ட வேண்டும் என்று யோசனை தெரிவிக்கிறேன். அவை ஒன்று அயோத்தி மற்ற இரண்டு காசி மற்றும் மதுரா.
3 கோவில்களைத்தான் கேட்கிறேன்...
மொகாலயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியாவில் 40,000 கோவில்கள் அழிக் கப்பட்டு மசூதிகளாக மாற்றம் செய்யப்பட்டன. இவை எல்லாவற்றையும் கோவிலாக திரும்ப கட்ட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இந்துக்களின் முக்கியமான 3 கோவில்களை மட்டும் கட்ட முஸ்லிம்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த சமரச திட்டம் குறித்து நான் முஸ்லிம் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறேன். அவர்கள் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர். மகாபாரத போரின் மூலம் அவர்கள் இதை புரிந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.