காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க கோரி சபாநாயகருக்கு சோனியா கடிதம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 30 ஆண்டுகளுக்கு பின்னர் நாட்டு மக்கள் தனி ஒரு கட்சிக்கு பெரும்பான்மை பலத்தை மக்கள் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சி வரிசையில் தேசிய அளவில் பெரிய கட்சியாக உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சிக்கும் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக இருப்பதற்கான அந்தஸ்தை பெறுவதற்கு தேவையான பலத்தை மக்கள் தரவில்லை.
காங்கிரஸ் கட்சி வெறும் 44 தொகுதிகளிலே வெற்றி பெற்றது. எதிர்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோரும் கட்சிக்கு மொத்தம் உள்ள 543 உறுப்பினர்களில் 10 சதவீத உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும். உரிமை கோரும் கட்சிக்கு 54 உறுப்பினர்கள் பலம் இருக்க வேண்டும்.
ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 44 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் காங்கிரசுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
எதிர்கட்சி தலைவர் பெற எந்த கட்சிக்கும் போதிய உறுப்பினர்கள் இல்லாததை தொடர்ந்து அந்த பதவியை காலியாக வைத்திருக்க சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்ற வட்டார தகவல்கள் வெளியாகின.
ஏற்கனவே இது தொடர்பாக பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர், வெங்கையா நாயுடு இது குறித்து முடிவு எடுப்பது சபாநாயகரின் தனிப்பட்ட உரிமை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற 10 சதவீத உறுப்பினர்களை பெற்றிருக்க வேண்டும் என்ற விதி பொருந்தாது என்று சோனியா தனது கடித்ததில் கூறியுள்ளார்.
அதிக எம்.பி.களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.