தோற்றவர்களின் புலம்பலாக இருக்கிறது ராகுல் பேச்சு: நிர்மலா சீதாராமன் 'பொளேர்'
டெல்லி: தோற்றுப் போனவர்களின் புலம்பலாகவே ராகுல் காந்தி பேச்சு இருக்கிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பாஜகவை மிகக் கடுமையாக விமர்ச்சித்து உரையாற்றினார் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அவரது இந்த பேச்சுக்கு உடனடியாக டெல்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பதிலடி தந்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ராகுல் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதிலடி: இந்திரா காந்தி ஊடகங்களை முழுவதும் இருட்டடிப்பு செய்தார். இப்போது அவருடைய பேரன் ஊடக சுதந்திரம் குறித்து பேசுகிறார்.
1984 சீக்கியர் வன்முறை
1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதற்கு காங்கிரஸ் கட்சி மட்டுமே முழுப் பொறுப்பு.
அமித்ஷா மீது அட்டாக்
பாஜக கொலை வழக்கு குற்றவாளியை தலைவராக்கி உள்ளது என்கிறார் ராகுல். நீதிமன்றம் அவரை விடுவித்துவிட்டது. அவருக்கு எதிராக சதிதிட்டம் தீட்டி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் நிரூபிக்கமுடியவில்லை,
கண்டுகொள்ளாத காங்கிரஸ்
விவசாயிகள் பிரச்சனையில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது?. அவர்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக வாக்கை மட்டும் பார்க்கிறார்கள்.
விவசாயிகள் தற்கொலை
கர்நாடகத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்; அதைப்பற்றி காங்கிரஸ் பேசவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ராகுல் காந்தியின் தோல்வி அடைந்தவர்களின் ஓலமாகத்தான் தெரிகிறது.. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.