தென்னிந்தியாவில்தான் "தாத்தா பாட்டீஸ்" அதிகமாம்... வடகிழக்கு ரொம்ப "யூத்"தா இருக்காம்!
டெல்லி: இளைஞர்கள் நிறைந்த நாடு என்று இந்தியாவை ரொம்ப காலமாகவே நாம் சொல்லி வருகிறோம். அது கிட்டத்தட்ட உண்மைதான். ஆனால் வயதானவர்கள் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறதாம்.
கடந்த 2001- 2011 ஆண்டு காலகட்டத்தில் வயதானவர்கள் (60 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) எண்ணிக்கை 2.7 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளில் 35 சதவீதம் அதிகமாகும் என்று அரசு புள்ளிவிவரத்தை மேற்கோள் காட்டி இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவிக்கிறது.
மக்கள் தொகைக் கட்டுப்பாடு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதன் எதிரொலியாக தென்னிந்தியாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால், அங்கு வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். மேலும் இங்கு சிறந்த சுகாதாரம் பேணப்படுவதும் இதற்கு இன்னொரு காரணமாம்.

சராசரி வயது
கடந்த 2001- 05 ஆண்டு காலகட்டத்தில் சராசரி ஆயுள் அளவு 63.2 ஆண்டுகள் என்றிலிருந்து 67.5 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் 2009-15 காலகட்டத்தில் இது 66.3 ஆண்டுகளாகவும், நகர்ப்புறங்களில் 77.1 ஆகவும் இருந்தது.

தாத்தாக்களை விட பாட்டிகளே அதிகம்
1991ம் ஆண்டு காலகட்டத்தில் வயதான பெண்களை விட ஆண்களே அதிகம் இருந்தனர். 2011ல் வயதான பெண்களின் எண்ணிக்கை 52.8 மில்லியனாக இருந்தது. ஆண்களின் எண்ணிக்கை 51.1 மில்லியனாக இருந்தது.

பொருளாதார வளர்ச்சி
இந்திய மக்கள் தொகையில் 8.6 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். பொருளாதார ரீதியில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருவதும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கியக் காரணமாகும்.

2 பிரிவினர்
2020ம் ஆண்டுவாக்கில் இந்தியாவின் நடுத்தர வயது என்பது 29 ஆக இருக்கும். இதுவே சீனாவில் 39, பிரேசில் 33, அமெரிக்கா 40 என்று இருக்குமாம். மேலும் இந்த காலகட்டத்தில் உழைக்கும் வர்க்கத்தினர் அதாவது 18 முதல் 59 வயதுக்குட்பட்டோர், இரு பிரிவினரை தாங்கிப் பிடிக்கும் நிலையில் இருப்பார்களாம். ஒன்று, 14 வயதுக்குட்பட்ட சிறார்கள், இரண்டாவது 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்.

இளமையான அருணாச்சலம்
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள், தென் மாநிலங்களை விட அதிக இளைஞர்களைக் கொண்டுள்ளதாக உள்ளது. குறிப்பாக அருணாச்சல் பிரதேதசத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை வெறும் 4.6 சதவீதம்தான்.

தமிழகத்தில் 10.4 சதவீத தாத்தா பாட்டிகள்
தென் மாநிலங்களில்தான் முதியோர்கள் எண்ணிக்கை அதிகமாகும். கேரளாவில் முதியோர் எண்ணிக்கை 12.6 சதவீதமாகும். கோவாவில் இது 11.2 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் 10.4 சதவீதமாக உள்ளது. ஆந்திராவில் 9.8 சதவீதம் பேரே முதியோர்கள் ஆவர்.

9 மாநிலங்களில் வேகமாக உயர்வு
இந்தியாவின் 9 மாநிலங்களில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அவை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளம், டெல்லி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகும்.












Click it and Unblock the Notifications