மாதச் செலவு ரூ.3,700க்கு வழியில்லை.. மோடிக்கு கடிதம் எழுதிவிட்டு விளையாட்டு வீராங்கனை தற்கொலை!
சண்டிகர்: கல்விச் செலவை சமாளிக்க இயலவில்லை என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு பஞ்சாப்பைச் சேர்ந்த தேசிய விளையாட்டு வீராங்கனை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஷியையும், வெள்ளி வென்ற சிந்துவையும், இறுதி வரை போராடிய தீபா கர்மகரையும் இந்தியா புகழ்ந்து, பாராட்டி வருகிறது. 100க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா இரண்டு பதக்கங்கள் மட்டுமே பெற்றுள்ளது. இது விளையாட்டு வீரர்கள் மீது மத்திய, மாநில அரசுகளின் போதிய கவனமின்மையையே காட்டுவதாக பரவலான குற்றச்சாட்டு நிலவுகிறது.
இந்தநிலையில், தற்போது இதனை மெய்ப்பிப்பது போல் அமைந்துள்ளது பஞ்சாபில் தேசிய வீராங்கனை ஒருவரின் தற்கொலை.
பஞ்சாபைச் சேர்ந்த தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை பூஜா (20). பாட்டியாலா கால்சா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்துவந்த இவருடைய தந்தை காய்கறி வியாபாரி ஆவார். இதனால் பெரும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கி தவித்து வந்துள்ளார் பூஜா.
பூஜாவை கடந்த ஆண்டு கல்லூரி நிர்வாகம் இலவசமாக தங்கும் விடுதி மற்றும் உணவு வழங்கப்படும் என்று உறுதியளித்து கல்லூரியில் சேர்த்துக் கொண்டுள்ளது. ஆனால் இவ்வருடம் விடுதில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பூஜா வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.ஆனால் வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்ல நாள் ஒன்றுக்கு ரூ. 120 செலவு ஆகியுள்ளது. எனவே, இந்த செலவை சமாளிக்க பூஜாவும், அவரது பெற்றோரும் பெரும் சிரமப்பட்டுள்ளனர். இதனால் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார் பூஜா.
ஆனால், கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் அரசின் உதவி கிடைக்காததால் மனமுடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மனக் குமுறல்களையெல்லாம் கடைசிக் கடிதமாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார் பூஜா. அந்த 4 பக்க தற்கொலை கடிதம் உறவினர்களால் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
அதில் அவர், "சமூதாயத்தில் என்னை போன்று உள்ள பிற பெண்களுக்கு தேவையான கல்வி வசதிகளை பிரதமர் மோடி உறுதிசெய்ய வேண்டும்," என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பயிற்சியாளரே என்னுடைய தற்கொலைக்கு காரணம் என்றும் பூஜா குற்றம் சாட்டியுள்ளார். அதாவது,"எனக்கு தங்கும் விடுதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் அவர் முக்கியமானவர், என்னுடைய வீட்டில் இருந்து தினமும் வந்துசெல்ல வைத்தவர். எனக்கு ஒரு மாதத்திற்கு ரூ. 3,720 செலவு ஆகிறது. என்னுடைய தந்தையால் இதனை சம்மாளிக்க முடியவில்லை" என வேதனையுடன் பூஜா குறிப்பிட்டுள்ளார்.
பூஜாவுக்கு இலவச கல்வி மறுக்கப்பட்டது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் அளித்துள்ள பதிலில், "இந்தவருடம் கல்வியில் அவருடைய செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை எனவே இலவச தங்கும் விடுதி வசதி சேவை வழங்கப்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நாட்டிற்கு பெருமை தேடித்தரும் விளையாட்டு வீரர்கள், நாட்டின் சொத்து போன்றவர்கள். அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுத்து, காக்கத் தவறினால் ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுகளில் நமது நாட்டிற்கு ஏமாற்றமே மிஞ்சும் என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.