குழந்தைகளுக்கு இடையே ட்விட்டர் தீவிரவாதத்தை பரப்புகிறது.. காஷ்மீர் போலீசிடம் என்சிபிசிஆர் புகார்!
ஸ்ரீநகர்: குழந்தைகளுக்கு இடையே தீவிரவாதத்தை பரப்புவதாக கூறி ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக என்சிபிசிஆர் எனப்படும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஜம்மு காஷ்மீரில் புகார் அளித்துள்ளது.
மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையில் தற்போது கடுமையான மோதல் நிலவி வருகிறது. மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை ட்விட்டர் நிறுவனம் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் ட்விட்டர் நிறுவனத்தின் சட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

இதனால் இனி ட்விட்டர் நிறுவனத்தில் வெளியாகும் ட்விட்களுக்காக, அந்த நிறுவனம் மீது வழக்கு தொடுக்க முடியும். உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே ட்விட்டர் நிறுவனம் மீது எப்ஐஆர் பதியப்பட்டு, சம்மனும் அனுப்பப்பட்டுவிட்டது.
அதேபோல் டெல்லியிலும் சிறுமிகளின் பாலியல் வீடியோக்களை வெளியிட்டதாக கூறி டிவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக போஸ்கோ வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக என்சிபிசிஆர் எனப்படும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஜம்மு காஷ்மீரில் புகார் அளித்துள்ளது.
குழந்தைகளுக்கு இடையே தீவிரவாதத்தை பரப்புவதாக கூறி ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக என்சிபிசிஆர் புகார் அளித்துள்ளது. ட்விட்டரில் சில நாட்களுக்கு முன் வைரலான வீடியோ ஒன்றின் காரணமாக இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சில சிறுவர்கள் கைகளில் துப்பாக்கியை வைத்து சுடுகிறார்கள். இவர்கள் காஷ்மீரை சேர்ந்தவர்கள் போல உள்ளனர்.
இவர்களுக்கு அருகில் 4-5 பெரியவர்கள் உள்ளனர். இந்த வீடியோ தீவிரவாதத்தை பரப்பும் விதமாக இருப்பதாக அந்த குழந்தைகள் நல அமைப்பு ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளது. அன்சார் காஸ்வாட் உல் இந்த் போன்ற தீவிரவாத அமைப்புகளை வளர விட ட்விட்டர் அனுமதிக்கிறது.
சிறுவர்கள் மத்தியில் இந்த வீடியோவை பரப்புகிறது. முக்கியமாக ஜம்மு காஷ்மீரில் இந்த வீடியோக்களை ட்விட்டர் நிறுவனம் அதிகம் பரப்பி உள்ளதாக என்சிபிசிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்ட பிரிவு 13ன் கீழ் இதனால் டிவிட்டர் நிறுவனம் மீது வழக்கு பதிய வேண்டும் என்று அந்த அமைப்பு ஜம்மு காஷ்மீர் போலீசில் புகார் அளித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்திற்காக சட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டதில் இருந்து வரிசையாக அந்த நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications