இலங்கை நெருக்கடி: 'பதவி விலக தயார்' - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தல்
தான் முன்பு அறிவித்ததை போன்று பதவி விலக தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.
பிரதமர் ஊடக பிரிவு இந்த தகவலை வெளியிட்டது.
ஜனாதிபதி மாளிகையை அண்மித்து நேற்று ராணுவ உறுப்பினர்கள் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.
போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கிலேயே, ராணுவ உறுப்பினர்கள் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டன.
எனினும், இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என ராணுவம் நேற்றிரவு அறிவித்திருந்தது.
இவ்வாறான பின்னணியிலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது ராஜினாமா தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.
- இலங்கை ஜனாதிபதி மாளிகை வசதிகளை அனுபவிக்கும் போராட்டக்காரர்கள் - பிபிசி தமிழின் கள அனுபவம்
- கோட்டாபய, ரணில் இல்லாவிட்டால் இலங்கைக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?
தான் ஜூலை மாதம் 13ம் தேதி பதவி விலகுவதாக கோட்டாபய ராஜபக்ஷ, அறிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியை பதவி விலக வலியுறுத்தி, கொழும்பு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு, கடந்த 9ம் தேதி லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தை நடத்தி, ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் என்ன நடக்கிறது?
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். எரிபொருள் வாங்க மிக நீண்ட வரிசையில் அவர்கள் காத்து கிடக்கும் சூழல் ஏற்பட்டது.
இதனால் இலங்கையில் 100 நாட்களுக்கும் மேலாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்று வந்தன. பின்பு அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அதன்பின் நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார்.
நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரமராக பதவியேற்றார். நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு நாட்டின் அதிபர் பதவி விலக வேண்டும் என்று கோரும் போராட்டம் மீண்டும் தீவிரமடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்றைய முன் தினம் போராட்டக்காரர்கள் காவல்துறையின் பாதுகாப்பை மீறி ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.
இதுகுறித்த பல்வேறு புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.
ஜனாதிபதி மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் மக்கள் குளித்து விளையாடினர். சமையலறையில் உள்ள உணவுகளை உண்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மக்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. அதுகுறித்து சில சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த வீட்டில் இருந்த புத்தகங்கள் எரிந்தது குறித்து ரணில் பெரும் வருத்தம் தெரிவித்திருந்தார்.
https://www.youtube.com/watch?v=EduVdWZ0gKc
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














Click it and Unblock the Notifications