மீண்டும் கவனம் பெறும் அயோத்தி.. இந்து, முஸ்லீம் தலைவர்களுடன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பேச்சுவார்த்தை
அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு வாழும் கலை அமைப்பின் தலைவர், ஸ்ரீ ரவிசங்கர் இன்று சென்று ராமர் கோயில் விவகாரத்தில் தொடர்புள்ள அமைப்புகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அயோத்தியில், ராமர் கோவில் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, நடுநிலையாளனாக இருந்து, அனைத்து தரப்பினரிடமும் பேச்சு நடத்த தயார் என அறிவித்த வாழும் கலை அமைப்பின் தலைவர், ஸ்ரீ ரவிசங்கர் இதன் ஒரு பகுதியாக அயோத்தி சென்றார்.
முன்னதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஆதித்யநாத் பேசினார். சர்ச்சைக்குரிய இடத்தில் முதலில் ஆய்வு செய்த ரவிசங்கர், அதன்பிறகு வழக்கில் தொடர்புள்ள இக்பான் அன்சாரி மற்றும் ஹாஜி மெகபூப் ஆகியோரையும் சந்தித்தார்.
இதன்பிறகு ராமஜன்மபூமி வாரிய தலைவர் நித்ய கோபால் தாஸ், ராம் விலாஸ் தாஸ்ஸ வேதாந்தி மற்றும் திகம்பர் அகாடா அமைப்பின், மகந்த் சுரேஷ் தாஸ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நிரோமி அகாடாவிற்கு மாலையில் சென்ற ரவி சங்கர், அங்கு மகந்த் தினேந்திர தாஸை சந்தித்தார். ரவிசங்கர் இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய பாஜக முன்னாள் எம்.பியான ராம்விலாஸ் வேதாந்தி உள்ளிட்ட சில இந்து மத துறவிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ஆசம்கானும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவிசங்கர் கூறுகையில், நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியுமே தவிர அது நீண்டகால தீர்வாக அமையாது. 50 வருடங்கள் கழித்து இதே பிரச்சினையை அன்று யாராவது எழுப்பவும் வாய்ப்புள்ளது. எனவே இரு மதத்தினரும் இணைந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். உலகமே நம்மை ஆச்சரியமாக பார்க்க வேண்டும். இது எனது தனிப்பட்ட முயற்சிதானே தவிர வேறு இல்லை என்றார் ரவிசங்கர்.