வாழும் கலை அமைப்பின் ரவி சங்கர் சொத்துக்களை குவித்துள்ளார்.. பாஜக முன்னாள் எம்.பி பரபர குற்றச்சாட்டு
அயோத்தி: அயோத்தி விவகாரத்தில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலையிடுவதற்கு அவரின் சொத்து குவிப்பே காரணம் என்று பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.பி. ராம் விலாஸ் வேதாந்தி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் பிரச்சினையில் இந்து, முஸ்லிம் மத பிரிவினரிடையே பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணச் செய்ய ரவிசங்கர் முயற்சி செய்து வருகிறார். நேற்று முதல்கட்டமாக அயோத்திக்கு அவர் சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். தனது தனிப்பட்ட விருப்பத்தின்பேரில் பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ராம் விலாஸ் வேதாந்தி கூறுகையில், "யார் இந்த ரவிசங்கர்? வெளிநாட்டு நிதி உதவியோடு தனது தன்னார்வ தொண்டு நிறுவனத்தை அவர் நடத்தட்டும். ரவி சங்கர் ஏகப்பட்ட சொத்துக்களை குவித்துள்ளார் என நினைக்கிறேன். எனவே, விசாரணையை தவிர்க்க அவர் ராமர் கோயில் விவகாரத்தில் தலையிடுகிறார்" என்றார்.
பாஜக முன்னாள் எம்.பி. ராம் விலாஸ் கருத்தை வைத்து பார்த்தால், ராமர் கோயில் விவகாரத்தில் அக்கறை காட்டினால், சொத்து குவித்தாலும், அதை மத்திய அரசு கண்டுகொள்ளாது என்ற அர்த்தம் வருவது குறிப்பிடத்தக்கது.