இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு ஏன்? தமிழரசு கட்சி விளக்கம்!
கொழும்பு: இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்கு ஈழத் தமிழர்களின் தமிழரசு கட்சி ஆதரவு தெரிவிப்பதாக அதன் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈழத் தமிழரின் பொதுவேட்பாளராக தமிழரசு கட்சியின் அரியநேந்திரன் எம்பி போட்டியிடும் நிலையில் தமிழரசு கட்சி, சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, சஜித் பிரேமதாச, அனுர குமார திசநாயக்க, நாமல் ராஜபக்சே, தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரனுக்கு 7 தமிழ்க் கட்சிகள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளன. அவரது சொந்த கட்சியான தமிழரசு கட்சியோ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக ஏற்கனவே அறிவித்தது. தற்போது தமிழரசு கட்சியின் மத்திய குழுவும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இது தொடர்பான தீர்மானத்தில், இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் தேதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் மூன்று முதன்மை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. இத்தேர்தல் அறிக்கைகளில் குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் பிரதேசங்களின் பொருளாதார மேம்பாடு பற்றி கவனம் செலுத்தப்பட்டது.
இந்த தேர்தல் அறிக்கைகளில் புதிய அரசியலமைப்பு உருவாக்குதலும் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுலாக்குவதும் ஆகும். ஒற்றையாட்சி மற்றும் புத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதனவாகும். அதற்குப் பதிலாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பின் மூலம் தீர்வு காணப்படுதல் வேண்டும் என்பது பிரதானமாகும்.
முக்கியமாக இவ்விடயங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாச, ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக ஆகியோருடன் நேரடியாக பேச்சுக்கள் நடைபெற்றன. தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இணைப்பாட்சி அடிப்படையிலான சமஷ்டிக் கட்டமைப்பில் முழுமையான தன்னாட்சி சம்பந்தமாக தொடர்ந்து போராடி வந்துள்ளோம். ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் பொருட்டு தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தீர்வுக்கான பிரேரணை முன்வைக்கப்படுதல் வேண்டும்.
தமிழ்ப் பேசும் மக்கள் என்ற வகையில் முஸ்லீம் சமூகத்துடனும் மலையக தமிழர்களுடன் இணைந்து செயல்படுதல் வேண்டும். 13ஆவது அரசியல் திருத்தம் அரசியலமைப்பின் ஒற்றையாட்சிக்குட்பட்டது. இதனை அரசியல் தீர்வாக எம்மால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். இருப்பினும் தமிழினத்தின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடையும் வரை இந்திய அரசின் நட்புறவுடன் 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நடைமுறையிலிருக்கும் மாகாண அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
எனவே, 2024 செப்டெம்பர் 21 ஆம் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பின் போது ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என அன்புடன் கோருகின்றோம். இவ்வாறு தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications