2 நொடியில் பாதிப்பு! எல்லாம் போச்சு.. எஸ்எஸ்எல்வி ராக்கெட் தோல்விக்கு என்ன காரணம்? இஸ்ரோ விளக்கம்
இரண்டே நொடி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் எஸ்எஸ்எல்வி ராக்கெட் தோல்வி அடைந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ். சோம்நாத் கூறியுள்ளார்.
Recommended Video
குறைந்த எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துவதற்காக இஸ்ரோ சார்பில் சிறிய ரக ராக்கெட்டான எஸ்எஸ்எல்வி வடிவமைக்கப்பட்டது. இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை முதன்முதலில் விண்ணில் செலுத்த திட்டமிட்ட இஸ்ரோ, இரண்டு குறைந்த எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை அதில் பொருத்தியது. இஓஎஸ் செயற்கைக்கோள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் தயாரித்த ஆஸாதிராட் செயற்கைக்கோள் ஆகியவை எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில் பொருத்தப்பட்டு கடந்த 7-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ் தவன் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
மிகவும் எடைக்குறைந்த ராக்கெட் மட்டுமின்றி 5 விஞ்ஞானிகளால் 72 மணிநேரத்திலேயே இதனை வடிவமைத்துவிட முடியும் என்பதால் எஸ்எஸ்எல்வியின் வெற்றியை இந்தியாவே எதிர்பார்த்திருந்தது. ஆனால், சரியான புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் தவறியதால் இத்திட்டம் தோல்வி அடைந்தது.
சென்சார் கோளாறால் எஸ்எஸ்எல்வி ராக்கெட் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ உடனடியாக அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், எஸ்எஸ்எல்வி ராக்கெட் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் விரிவாக விளக்கியுள்ளார். இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

முதலில் எஸ்எஸ்எல்வி ராக்கெட் தோல்வி குறித்து கூறுவதற்கு முன்பு ராக்கெட்டின் முக்கிய தொழில்நுட்பம் குறித்து கூற விரும்புகிறேன். இது பற்றி தெரிந்தால்தான் எஸ்எஸ்எல்வி ராக்கெட் தோல்வி அடைந்த விதத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். விண்வெளிக்கு செலுத்தபடும் ராக்கெட்டில் ஏதேனும் அடிப்படையான இயந்திரக் கோளாறு ஏற்பட்டால், அதில் பொருத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோளை பாதுகாப்பதற்கான பணியை ராக்கெட்டில் உள்ள கணினி தாமாகவே மேற்கொள்ள ப்ரோகிராம் செய்யப்பட்டிருக்கும். இப்போது எஸ்எஸ்எல்வி ராக்கெட் விஷயத்துக்கு வருவோம்.
எஸ்எஸ்எல்வி ராக்கெட் புவி வட்டப்பாதையில் சுற்றி வரும் போது, அதில் இருந்த ஆக்செலரோமீட்டர்களில் (வேகத்தை குறிக்கும் கருவி) ஒன்றில் லேசான கோளாறு ஏற்பட்டது. ராக்கெட்டில் இருந்து சாட்டிலைட்டுகளை விடுவிக்கும் இரண்டாம் ஸ்டேஜில் இந்தப் பிரச்னை உருவானது. வெறும் இரண்டு நொடிகள் மட்டுமே இந்த பிரச்னை நீடித்தது. ஆனால், இந்த சிறிய கோளாறை ராக்கெட்டில் இருந்த கணினி பெரிய பிரச்னையாக புரிந்து கொண்டு, இனி நம்மால் மேற்கொண்டு செயல்பட முடியாது என்ற முடிவுக்கு வந்தது. இதனால் மூன்றாம் ஸ்டேஜில் விடுவிக்க வேண்டிய சாட்டிலைட்டுகளை இரண்டாம் ஸ்டேஜின் இறுதிக்கட்டத்தில் கணினி விடுவித்துவிட்டது. இதனால்தான் புவி வட்டப்பாதைக்கு பதிலாக நீள்வட்ட பாதையில் சாட்டிலைட்டுகள் நிலைநிறுத்தப்பட்டன. இதுதான் எஸ்எஸ்எல்வி ராக்கெட் தோல்வி அடைந்ததற்கு காரணம் ஆகும். இவ்வாறு சோம்நாத் கூறினார்.












Click it and Unblock the Notifications