நேதாஜியை சிறை பிடித்து கொலை செய்தார் ஸ்டாலின்.. அது நேருவுக்குத் தெரியும்.. சாமி புதுத் தகவல்
கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை. மாறாக அவர் விமான விபத்தில் தான் இறந்து விட்டதாக நாடகமாடி இந்தியாவிலிருந்து வெளியேறி சீனாவுக்குப் போய் விட்டார். அங்கு வைத்து அவரை சோவியத் யூனியன் சர்வாதிகாரி ஸ்டாலின் பிடித்து சைபீரிய சிறையில் அடைத்தார். அங்கு வைத்து நேதாஜியை அவர்கள் கொலை செய்து விட்டனர். இது ஜவஹர்லால் நேருவுக்குத் தெரியும் என்று சுப்பிரமணியன் சாமி புதுத் தகவலை வெளியிட்டுள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த வர்த்க சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது இந்தத் தகவல்களை அவர் வெளியிட்டார்.
இதுதொடர்பான கோப்புகள் இந்திய அரசிடம் உள்ளன. அவற்றை வெளியிட்டால் இந்தியாவுக்கும், இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு கெட்டு விடும். இருப்பினும் நேதாஜியின் வீரச் செயல்களால்தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது என்பதால் இதை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடியை நான் வலியுறுத்துவேன் என்றும் கூறினார் சாமி.
இக்கூட்டத்தில் சாமி பேசியதிலிருந்து....

விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை
1945ம் ஆண்டு விமான விபத்தில் நேதாஜி இறந்தார் என்பதுதான் இதுவரை உள்ள கருத்தாக இருக்கிறது. ஆனால் அதில் உண்மை இல்லை. தான் விமான விபத்தில் இறந்தது போல நாடகமாடி விட்டு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று விட்டார் நேதாஜி.

சீனாவுக்குத் தப்பிச் சென்றார்
இந்தியாவிலிருந்து வெளியேறிய அவர் சீனாவின் மஞ்சூரியாவுக்குத் தப்பிச் சென்றார். அந்தப் பகுதி அப்போது ரஷ்யாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.

ரஷ்யா செய்த நம்பிக்கைத் துரோகம்
தன்னை ரஷ்யா காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான் அங்கு சென்றார் நேதாஜி. ஆனால் ரஷ்யா அவரைக் காப்பாற்றுவதற்குப் பதில் கைது செய்து விட்டது.

சைபீரிய சிறையில் அடைத்த ஸ்டாலின்
சோவியத் யூனியன் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின், நேதாஜியைக் கைது செய்து சைபீரிய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டார் நேதாஜி.

சைபீரிய சிறையிலேயே மரணம்
அதன் பின்னர் நேதாஜியைக் கொலை செய்ய உத்தரவிட்டார் ஸ்டாலின். அதன்படி அவரைக் கொன்று விட்டனர். அவர் தூக்கிலிடப்பட்டோ அல்லது மூச்சுத் திணறடிக்கப்பட்டோ கொலை செய்யப்பட்டார். 1953ம் ஆண்டில் நேதாஜி கொல்லப்பட்டுள்ளார்.

ஆவணங்கள் உள்ளது
இதுதான் நம்மிடம் தற்போது உள்ள ரகசிய ஆவணத்தில் இடம் பெற்றுள்ள தகவல்கள் ஆகும்.

நேருவுக்குத் தெரியும்
போஸ் சிறையில் அடைக்கப்பட்ட விவரம் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குத் தெரியும். சைபீரியாவின் யகுட்ஸ்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நேதாஜி.

உறவு பாதிக்கும்
நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுவது மிகவும் கடினமானது. சிரமமானது. அதில் பல சிக்கல்கள் உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா இடையிலான உறவு இதனால் பாதிக்கப்படும்.

ஆனால் வெளியிட வேண்டும்
ஆனால் இதை நாம் நிச்சயம் வெளியிட்டாக வேண்டும். இதுதொடர்பாக நான் பிரதமர் மோடியை வலியுறுத்துவேன். காரணம், நேதாஜியின் வீரச் செயல்களால்தான் நமது நாடு விரைவிலேயே விடுதலை அடைய முடிந்தது. அதுவே உண்மை. எனவே நாம் இந்த ஆவணங்களை வெளியிடுவதே பொருத்தமானது என்றார் சாமி.

நேதாஜி மர்மம் வெளியில் தெரிய வேண்டும்
நேதாஜி குறித்த மர்மம் தொடர்ந்து மர்மமாகவே இருக்கக் கூடாது. அது வெளியில் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கூறினார் சாமி.

ஸ்டாலின் ஆட்சிக்காலம்
சோவியத் யூனியனை 1922ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி முதல் 1952ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி வரை ஆட்சி புரிந்தவர் ஸ்டாலின். ஆனால் 1953ம் ஆண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் நேதாஜி கொல்லப்பட்டதாக சாமி கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications