ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா முயன்றால் அதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
Recommended Video
டெல்லி: வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயன்றால் அதை தடுத்து நிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.
போராட்டம் தீவிரமடைந்ததை பார்த்த தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து ஆலை இழுத்துப்பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லாது, இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றம் செல்லக்கூடும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் ஏதேனும் மனு தாக்கல் செய்தால், அந்த வழக்கு விசாரணையில் எங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு எங்கள் தரப்பு வாதங்களையும் கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கூயிருப்பதாவது, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஏதேனும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கு விசாரணையின் போது எங்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.