என் வழி... தனிவழி... மே. வங்கத்தில் பந்த் நடக்காது... மம்தா பானர்ஜி தடாலடி
கொல்கத்தா: நாடு தழுவிய அளவிலான தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தததால் எந்தப் பாதிப்பும் மேற்கு வங்கத்தில் ஏற்படாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
"மக்கள் விரோத" கொள்கைகளுக்கு எதிராக 48 மணி நேரம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு 10 மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்தநிலையில், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: இந்த விஷயத்தில் ஒரு வார்த்தையை கூட நான் செலவழிக்க விரும்பவில்லை. மேற்கு வங்கத்தில், எந்த பந்த்தும் நடக்காது; நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை.

பந்த் இருக்காது
போதும்.. போதும்... கடந்த 34 ஆண்டுகளில், அவர்கள் (இடதுசாரி) மாநிலத்தை அழித்துவிட்டனர். எந்த பந்தும் இருக்காது என்று தெரிவித்தார்

விடுப்பு எடுக்க தடை
இதற்கிடையே, பந்தில் பங்கேற்க கூடாது என்பதற்காக, கடந்த வாரம் அரசு வெளியிட்ட அறிக்கையில், மாநில அரசு ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை அன்று சாதாரண விடுப்பு அல்லது ஏதேனும் ஒரு நாள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டது.

பேருந்துகள் இயங்கும்
பொதுமக்களை பாதிக்காத வகையில், போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் டாக்ஸி சங்கங்கள் வழக்கமாக இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

சட்ட நடவடிக்கை பாயும்
இதற்கிடையே, காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிற வகையில் யாரேனும் நடந்து கொண்டால், அவர்கள் கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். சந்தை இடங்கள், மால்கள் மற்றும் ஒவ்வொரு வியாபார நிறுவனங்களும் வழக்கம் போல் இயங்கும். தடைகளை ஏற்படுத்த முயன்றால், சட்ட நடவடிக்கை பாயும் என்றார்.

பிரதமர் வேட்பாளர்?
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் பல்வேறு மாநில கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ள நிலையில், தனித்துவமாக மம்தா பானர்ஜி பணியாற்றி வருகிறார். பாஜகவுக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும், பந்தில் பங்கேற்க போவதில்லை என்ற நிலைப்பாட்டினை மம்தா பானர்ஜி எடுத்துள்ளார். வருகிற நாடாளுமன் தேர்தலில் மம்தா பானர்ஜியின் அறிவிப்பு முக்கியமானதாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications