தேர்வு அறையில் நிர்வாண சோதனை.. அவமானம் தாங்காமல் மாணவன் தற்கொலை - ஆசிரியர் கைது
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்வு எழுதும் அறையில் நிர்வாணப்படுத்தி சோதனை செய்த அவமானம் தாங்காமல் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போபால் அருகில் ஹோசன்காபாத் என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில் காலாண்டு பரீட்சை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் தேர்வு நடந்து கொண்டிருந்த போது, பரீட்சை எழுதிய 10-ம் வகுப்பு மாணவன் மீது ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஆசிரியர், அந்த மாணவனை எழுந்து நிற்கும்படி கூறி சோதனையிட்டார். பிறகு அந்த மாணவனிடம் பேண்ட்டை கழற்றும்படி உத்தரவிட்டார்.
பரீட்சை அரங்கில் மாணவிகளும் இருந்ததால் அந்த மாணவர் தயங்கினார். இதையடுத்து அந்த ஆசிரியர் மாணவனை அடித்து உதைத்து ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி சோதனையிட்டார்.
மற்ற மாணவர்கள் அந்த மாணவரை கேலி செய்தனர். இதனால் மனம் உடைந்த அந்த மாணவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை நிர்வாணமாக்கி சோதனை செய்த ஆசிரியரை கைது செய்தனர்.