யானை சவாரி செய்த மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாப பலி... கேரளாவில்!
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் திருவிழாவின்போது யானை மீது ஏறி அமர்ந்து சவாரி செய்த பிளஸ்டூ மாணவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எளநாடு அருகே உள்ளது மாலாட்டுகுளம். இங்கு வசிப்பவர் உன்னிதாஸ். இவரது மகன் ஜிதின் (17). ஜிதின் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று எளநாடு புலிப்புரம் அய்யப்பன் கோவில் திருவிழா நடைபெற்றது. ஐய்யப்பனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஜிதின் தனது தந்தையுடன் யானை சவாரி செய்ய விரும்பினார். அதன்படி தந்தையும், மகனும் யானை மீது ஏறினர். பாகனுடன் 3 பேர் யானை மீது பயணம் செய்தனர்.

இருக்கையின் மீது குடை அமைக்கப்பட்டிருந்தது. யானை செல்லும் வழியில் உள்ள மின் கம்பியை மரதடியால் தூக்கி விட்டவாறு ஜிதின் சென்றார். முக்கிய சாலையில் வந்தபோது மின் கம்பியை தூக்கி விட ஜிதின் முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் ஜிதின் உடல் மீது பாய்ந்தது.
இதையடுத்து ஜிதின் தூக்கி வீசப்பட்டார். கீழே விழுந்த அவர் படுகாயமடைந்தார். அதேசமயம் மர இருக்கையில் அமர்ந்திருந்ததால் மற்றவர்கள் மீது மின்சாரம் பாயவில்லை. யானையும் தப்பியது.
படுகாயம் அடைந்த ஜிதினை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலைக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ஜிதின் பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications