மனுஸ்மிருதியை எரித்து ஜே.என்.யூ பாஜக மாணவர் அமைப்பின் அதிருப்தியாளர்கள் போராட்டம்
டெல்லி: பெண்கள், தலித்துகளை இழிவுபடுத்துகிற 'மனுஸ்மிருதி'யை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜேஎன்யூ) பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியின் அதிருப்தியாளர்கள் எரித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிராமணிய மேலாதிக்கத்தை நிலைநாட்டுகிற வேத நூல் மனுஸ்மிருதி. மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என வேறுபடுத்தும் அம்சங்களைக் கொண்டது இது. குறிப்பாக தலித்துகளை மனித சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க வலியுறுத்துகிறது மனுஸ்மிருதி.
ஆகையால் சர்வதேச மகளிர் தினமான நேற்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இந்த மனுஸ்மிருதி நூலை எரிக்கும் போராட்டத்தை மாணவர்கள் நடத்தினர். அண்மையில் ஏபிவிபியில் இருந்து வெளியேறிய மாணவர்களும் ஏபிவியின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்துள்ளவர்களும் இடதுசாரி மாணவர் சங்கத்தினரும் இணைந்து மனுஸ்மிருதியை எரித்தனர்.
இது குறித்து ஜே.என்.யூவின் ஏபிவிபி அமைப்பின் துணைத் தலைவரான ஜதின் கோரையா கூறுகையில், பெண்கள், தலித்துகளை இழிவுபடுத்துகிற மனுஸ்மிருதியின் அம்சங்களைத்தான் எரித்தோம் என்றார்.
மனுஸ்மிருதி எதிர்ப்பு மற்றும் எரிப்பு போராட்டங்களை தமிழகத்தில் திராவிடர் இயக்கங்கள்தான் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் அதிருப்தி பிரிவினரும் மனுஸ்மிருதி எரிப்பு போராட்டத்தை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.