ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேரக் கிளம்பிய பெண் உள்ளிட்ட 15 ஹைதராபாத் மாணவர்கள்.. தடுத்து மீட்பு
ஹைதராபாத்: ஹைதராபத்தில் ஒரு பெண் உள்பட 15 இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்றதை ஹைதராபாத் போலீசார் தடுத்து நிறுத்தி மீட்டுள்ளனர்.
இந்த 15 பேரையும் காணவில்லை என்று அவர்களது பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து அவர்களை தீவிரமாக தேடி வந்த போலீஸார், கடைசியில் மேற்கு வங்காளத்தில் பிடிப்பட்டனர்.
அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய மிகவும் ஆர்வமாக இருந்துள்ளனர். என்று போலீஸ் தவகல்கள் தெரிவித்துள்ளன.
சமூக வலைதள ஆபத்து:
இவர்களுக்கு 23 வயதில் இருந்து 25 வயதுக்குள் இருக்கும். சமூக வலைத்தளங்கள் மற்றும் செல்போனில் உள்ள இணையதள இணைப்பு வழியாக கிடைக்கும் தகவல்களை பார்த்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் மீது அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
ஈராக் செல்லத் திட்டம்:
இதனால் அவர்கள் எப்படியாவது ஈராக் சென்று அந்த இயக்கத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று திட்டமிட்டனர்.
பெற்றோர் சந்தேகம்:
ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் சில காலமாக சரியில்லாததால் அவர்களது பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தொடர் கண்காணிப்பு:
போலீசாரும் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்ததுடன், பெற்றோரையும் தொடர்ந்து தகவல் தரும்படி கூறியிருந்தனர். இந்த நிலையில் 15 பேரும் கொல்கத்தாவுக்கு சென்றனர்.
கொல்கத்தாவுக்கு ஓட்டம்:
அங்கிருந்து ஈராக் செல்ல அவர்கள் திட்டமிட்டனர். இந்த தகவல் அவர்களது பெற்றோருக்கு தெரிந்ததும் அவர்கள் போலீசாரிடம் கூறினர். உடனே ஹைதராபாத் போலீசார் கொல்கத்தாவுக்கு விரைந்து சென்று அவர்களை பிடித்து ஹைதராபாத்துக்கு அழைத்து வந்தனர்.
எந்தத் தொடர்பும் இல்லை:
அவர்களுக்கு போலீசார் உரிய அறிவுரைகள் வழங்கி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினருடன் எந்த தொடர்பும் கிடையாது. அந்த இயக்கத்தின் மீதான அபிமானத்தால் அதில் சேர கிளம்பியுள்ளனர்.
தவறான பாதை:
சமூக வலைத்தளங்களில் கிடைத்த தகவலை வைத்து அவர்கள் அந்த இயக்கத்தில் சேர திட்டமிட்டுள்ளனர் என்று போலீஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.