நான் பாஜகவின் செயற்குழு சிறப்பு அழைப்பாளர்- என் கருத்தை தமிழிசை நிராகரிக்க முடியாது: சு.சுவாமி
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நான்.. என்னுடைய கருத்தை மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவரான தமிழிசை சவுந்திரராஜனால் நிராகரிக்க முடியாது என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தமிழக மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்யும்படி நான்தான் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவுக்கு யோசனை தெரிவித்தேன் என்று கூறியிருந்தார்.

தமிழிசை கண்டனம்
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பேட்டிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழிசைக்கு உரிமை இல்லை
ஆனால் சுப்பிரமணியன் சுவாமியோ, பாஜகவின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் என்ற முறையில் எனது கருத்தை நிராகரிக்கும் உரிமையும், அதிகாரமும் மாநில அளவில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இல்லை. மேலிடத் தலைவர்கள்தான் இது பற்றிப் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.

நழுவிய முரளிதரராவ்
இது குறித்து தமிழகத்துக்கான பாஜகவின் மேலிடப் பொறுப்பாளரான முரளிதர ராவிடம் சுவாமியின் பேட்டி குறித்து செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, நான் முக்கியமான அலுவலில் ஈடுபட்டுள்ளேன். இது பற்றி கருத்து தெரிவிக்க முடியாது என்றார். மீண்டும் அவரது செல்போனைத் தொடர்பு கொண்டபோது, பின்னர் பேசுகிறேன் எனக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

பம்மும் லலிதா குமாரமங்கலம்
பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் லலிதா குமாரமங்கலம் இது பற்றி கூறுகையில், சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு சூழ்நிலைகளில் சில கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அவரது பேச்சு குறித்து மேலிடத் தலைவர்களுடன் கலந்து பேசாமல் எந்த நிலைப்பாட்டையும் தெரிவிக்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications