பாதுகாப்பில் பெரும் குறைபாடு.. காஷ்மீரில் பாதியிலேயே நடைப்பயணத்தை நிறுத்திய ராகுல் காந்தி- என்னாச்சு
ராகுல் காந்தி இன்று ஜம்மு காஷ்மீரில் நடைபயணம் மேற்கொண்ட போது அவருடன் இருக்கும் பாதுகாவலர்கள் இன்று உடன் இல்லை என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.
ஸ்ரீநகர்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, காஷ்மீரில் பாதி வழியிலேயே பாரத் ஜோடோ நடைப்பயணத்தை காங்கிரஸ் இன்று நிறுத்திக் கொண்டுள்ளது.
'பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில் நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி நூற்றுக்கணக்கானோருடன் காஷ்மீருக்குள் கடந்த வாரம் நுழைந்தார்.
இதனிடையே, டெல்லிக்குள் கடந்த மாதம் ராகுல் காந்தி நுழைந்தது முதலாகவே அவரது பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும், இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதமும் எழுதினார்.
ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் இணைந்த முன்னணி தமிழ் எழுத்தாளர்.. 2015 சர்ச்சை ஞாபகம் இருக்கா?
அதிகரித்த பாதுகாப்பு
இதையடுத்து, இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு டெல்லி போலீஸாருக்கும், ராகுல் காந்திக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு கொடுத்து வரும் கமாண்டோ படையினருக்கும் மத்திய உள்துறை உத்தரவிட்டது. இதில், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் எந்தக் குளறுபடியும் நடைபெறவில்லை என்றும், அவர்தான் அடிக்கடி பாதுகாப்பு விதிகளை மீறி நடந்து கொள்வதாகவும் டெல்லி காவல்துறையும், கமாண்டோ படையும் பதிலளித்தனர். இந்த சூழலில், பஞ்சாப், காஷ்மீருக்குள் ராகுல் நுழைய இருந்ததால் அவரது பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் அதிகப்படுத்தியது.
குண்டுவெடிப்பால் பதற்றம்
இந்நிலையில், கடந்த வாரம் ராகுல் காந்தியின் நடைப்பயணம் காஷ்மீருக்குள் நுழைந்தது. காஷ்மீரில் அவர் நடைப்பயணம் சென்று கொண்டிருந்த போது ஜம்முவில் இரண்டு இடங்களில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர். இது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மேலும் அதிகரித்த மத்திய உள்துறை அமைச்சகம், நடைப்பயணத்தில் எத்தனை பேர் கலந்துகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளையும் விதித்தது.
"பாதுகாப்பில் குளறுபடி"
இந்நிலையில், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி நடைப்பயணத்தை காங்கிரஸ் பாதியிலேயே ரத்து செய்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், "காஷ்மீரின் காஸிகண்ட் பகுதியில் ராகுல் காந்தி நுழைந்த போது, பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே இருக்க வேண்டி காஷ்மீர் போலீஸார் திடீரென மாயமாகினர். மேலும், ராகுல் காந்தியை பார்க்க வரும் பெரும் கூட்டத்தையும் பாதுகாப்புப் படையினர் முறையாக கையாளவில்லை. இதனால் 11 கி.மீ. செல்லவிருந்த ராகுல் காந்தியால் வெறும் 500 மீட்டரே செல்ல முடிந்தது. அதற்கு மேல் அவரால் நகர முடியவில்லை. இதனால் பாதியிலேயே நடைப்பயணத்தை ரத்து செய்துவிட்டோம்" என்றனர்.
"அரசு விளக்கமளிக்க வேண்டும்"
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ராகுல் காந்தியின் பாதுகாப்ப வளையத்திற்கு வெளியே இருக்கும் "D" பகுதியில் இருந்து பாதுகாப்புப் படையினர் திடீரென வாபஸ் பெறப்பட்டனர். இதனால் பெரிய அளவில் பாதுகாப்பு விதிமீறல்கள் நடைபெற்றன. பாதுகாப்புப் படையினரை வாபஸ் பெற உத்தரவிட்டது யார்? இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையும், மத்திய அரசும் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.