சூட்கேஸ் விவகாரம்: உண்மை தெரியாமல் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட மனிஷ் திவாரி
டெல்லி: சூட்கேஸ் விவகாரத்தை காங்கிரஸ் தலைவர் மனிஷ் திவாரி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியின் ஆட்சியை சூட் பூட் சர்கார் என்று விமர்சித்து வருகிறார். பதிலுக்கு மோடியோ சூட்கேஸ் கலாச்சாரத்தை விட சூட்பூட் பரவாயில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மனிஷ் திவாரி கூறுகையில், 1999ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான் சூட்கேஸ்களில் பணத்தை நிரப்பி அவற்றை ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் இருந்த தாலிபான் தீவிரவாதிகளிடம் அளித்தது என்றார்.
தீவிரவாதிகள் கந்தஹாருக்கு கடத்திச் சென்ற ஐசி 814 விமானத்தில் இருந்த இந்திய பயணிகளை மீட்க நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் சி.டி. சஹாய் திவாரியின் பேச்சு பற்றி ஒன்இந்தியாவிடம் கூறியுள்ளதாவது,

ஐஎஸ்ஐ
கடத்தப்பட்ட ஐசி 814 விமானம் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் தரையிறக்கப்பட்டதால் தான் தாலிபான்களின் பெயர் அடிபட்டது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரும், தீவிரவாதியுமான மவுலானா மசூர் அசாரை விடுவிக்க வைக்க நினைத்து பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ தான் அந்த விமானத்தை கடத்தியது. பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டபோதிலும் ஐஎஸ்ஐ இந்தியாவிடம் கேட்டது அசாரின் விடுதலையை தான்.

தாலிபான்
ஐஎஸ்ஐ நடத்திய கடத்தல் விவகாரத்தை நிர்வகித்தது மட்டும் தான் தாலிபான்கள். ஐஎஸ்ஐ பின்னால் இருந்து கொண்டு தாலிபான்களை வைத்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்தது.

பேச்சுவார்த்தை
இந்திய பயணிகளை மீட்க பேச்சுவார்த்தை நடந்த அறையில் நான் இருந்தேன். ஆப்கானிஸ்தானை ஆண்ட தாலிபான்கள் அந்நாடு வெளியுறவுத் துறை அமைச்சரை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்திருந்தனர். விமானத்தை கடத்தியவர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்று ஒரு பட்டியலை அளித்திருந்தனர். அதில் பணமும் இடம்பெற்றிருந்து. ஆனால் அரசு பணத்தை அளிக்க தயாராக இல்லை. இதையடுத்து வெளியுறவுத் துறை அமைச்சர் அந்த பட்டியலை தாலிபான்களின் தலைவரான முல்லா உமரிடம் காண்பித்து ஆலோசனை நடத்த சென்றுவிட்டார்.

பணம்
திரும்பி வந்த அமைச்சர் தெரிவித்தது வியப்பளித்து. முல்லா உமர் பயணிகளை விடுவிக்க பணம் பெறுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறி பணம் வேண்டாம் என்றுவிட்டார் என அமைச்சர் தெரிவித்தார். காஷ்மீரில் இறந்த போராளி சஜ்ஜத் ஆப்கானியின் உடலை தோண்டி எடுத்து அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதிலும் அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்திருந்தால் அதை தோண்டி எடுப்பது மதத்திற்கு எதிரானது என உமர் தெரிவித்திருந்தார்.

அசார்
அவர்களுக்கு மவுலானா மசூத் அசார் விடுவிக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கிய கோரிக்கை. அதற்காகத் தான் ஐஎஸ்ஐ விமானத்தை கடத்தியது. ஐஎஸ்ஐக்கோ தாலிபான்களுக்கோ இந்திய அரசு பணம் எதுவும் அளிக்கவில்லை.

காங்கிரஸ்
மனிஷ் திவாரியின் பேச்சு ஆச்சரியமாக உள்ளது. உண்மை என்னவென்பது தெரியாமல் அவர் ஏன் இப்படி பேசியுள்ளார்? 166 பேரின் வாழ்க்கை பிரச்சனையாக இருந்தபோது நடந்த விஷயம் பற்றி திவாரி இப்படியா பேசுவது? பயணிகளை விடுவிக்க பணம் அளிக்கப்பட்டதா என காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது விசாரித்து கண்டுபிடித்திருக்கலாமே என்று சஹாய் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications