அத்வானியின் சகாப்தம் முடிந்துவிட்டது: சொல்கிறார் சுஷில் குமார் மோடி
டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானியின் சகாப்தம் முடிந்துவிட்டதாக பாஜக தலைவரும் முன்னாள் பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவரும், முன்னாள் பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மக்களின் மனநிலையை உணர தவறிவிட்டார் அத்வானிஜி. அடல்ஜியை பிரதமர் வேட்பாளராக அத்வானிஜி தான் அறிவித்தார். அதே போன்று தற்போது மோடியின் பெயரையும் அறிவிக்கலாமே. அரசியலில் மட்டும் தான் கடைசி வரை மக்கள் பதவிக்கு முயற்சி செய்கிறார்கள். அமைச்சர் பதவி ஒரு இறந்த அரசியல்வாதியை உயிர்ப்பிக்குமா? என்று தெரிவித்துள்ளார்.
மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது தொடர்பாக பாஜக தலைவர்கள் அத்வானியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.