சுனில் ஜோஷி கொலை வழக்கு: சாத்வி பிரக்யா உட்பட 8 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு!
தேவாஸ்: ஆர்.எஸ்.எஸ். இயக்க பிரமுகரும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியுமான சுனில் ஜோஷி படுகொலை வழக்கில் சாத்வி பிரக்யா உட்பட 8 பேர் மீது மத்திய பிரதேசத்தின் தேவாஸ் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் 28-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
2007ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த சுனில் ஜோஷி. இவர் மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2007 டிசம்பர் 29-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்தது. அதில் சுனில்ஜோஷி படுகொலைக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இல்லை; ஆனால் பெண்துறவி சாத்வி பிரக்யாவிடம் தவறாக நடக்க முயன்றதால் சுனில் ஜோஷி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சாத்வி பிரக்யா, மகாராஷ்டிராவின் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல ஆண்டுகாலம் நடைபெற்று வரும் இந்த சுனில் ஜோஷி படுகொலை வழக்கில் சாத்வி பிரக்யா உட்பட 8 பேர் மீது தேவாஸ் விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28-ந் தேதி முதல் இவ்வழக்கின் விசாரணை தொடங்க உள்ளது.












Click it and Unblock the Notifications