அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கு பிசிசிஐ பதவி கிடையாது.. லோதா குழு பரிந்துரையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்
டெல்லி: அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பிசிசிஐ பதவிக்கு வர முடியாது என்பது உள்ளிட்ட லோதா கமிட்டி வழங்கிய முக்கிய பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆறு மாதங்களுக்குள் இந்த பரிந்துரைகளை பிசிசிஐ அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது சுப்ரீம் கோர்ட்.
கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெட்டிங் விவகாரம் வெளிக்கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, இந்திய கிரிக்கெட் வாரியத்தை (பிசிசிஐ) சீரமைப்பதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, முன்னாள் நீதிபதிகள் அசோக் பான், ஆர்வி ரவீந்திரன் ஆகிய 3 பேரைக் கொண்ட கமிட்டியை, உச்ச நீதிமன்றம் அமைத்தது.

இந்த குழு கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி 159 பக்கங்கள் கொண்ட பல்வேறு பரிந்துரைகளை அளித்தது.
அந்த பரிந்துரையில், கிரிக்கெட் வாரியத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு இருத்தல் கூடாது, கிரிக்கெட் வாரியத்தில் பதவி வகிப்போருக்கு வயது வரம்பு, பதவிக் காலம் நிர்ணயிக்கப்பட வேண்டும், கிரிக்கெட் சூதாட்டத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வேண்டும், கிரிக்கெட் வாரியத்துக்கு ஒரு மாநிலத்தில் இருந்து ஒருவரே பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட வேண்டும், கிரிக்கெட் வாரியத்தில் நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு இருக்கும் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.
ஆனால், அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் பிசிசிஐ தாமதப்படுத்தி வந்தது. லோதா குழுவின் பரிந்துரைகளை எதிர்த்து பிசிசிஐ மற்றும் பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. லோதா குழுவின் பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை ஏற்பதாகவும் அப்பரிந்துரைகளை 6 மாதத்துக்குள் பிசிசிஐ அமல்படுத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநில சங்கத்தில் இருப்பவர்கள், பிசிசிஐ நிர்வாகத்தில் இடம் பெறக்கூடாது, பிசிசிஐ தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 70 வயதுக்குட்பட்ட இந்தியராக இருக்க வேண்டும், இப்பதவியை வகிப்போர் அமைச்சராகவோ, அரசு அதிகாரிகளாகவோ அல்லது பிசிசிஐயில் 9 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களாக இருக்கக் கூடாது, ஒரு மாநிலத்தில் ஒரு கிரிக்கெட் சங்கம் மட்டுமே இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அந்த ஒரு சங்கத்திற்கு மட்டும், தேர்தலில் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.












Click it and Unblock the Notifications