தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி புல்லர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனு ஏற்பு!
டெல்லியில் 1993ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த காலிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்பின் நிர்வாகி தேவேந்திரபால் சிங் புல்லருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பின்னர் அது நிராகரிக்கப்பட்டது.
காலதாமதமாக கருணை மனு நிராகரிக்கப்பட்டதை காரணம் காட்டி தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் புல்லர் தரப்பில் கடந்தாண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் இதை நிராகரித்துவிட்டது.
இந்நிலையில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. மேலும், கருணை மனு மீது முடிவெடுக்க கால தாமதம் செய்ததால் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இதனடிப்படையில், புல்லர் தரப்பில் மீண்டும் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.