தமிழகத்துக்கு காவிரி நீர்.. மறுஉத்தரவு வரும் வரை தினமும் 2000 கன அடி.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
நாளொன்றுக்கு 2000 கன அடி நீரை காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கர்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு பிப்ரவரி 7ம் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெறும்
டெல்லி: மறு உத்தரவு வரும் வரை தினமும் 2000 கன அடி நீரை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான வழக்கு அடுத்த மாதம் 7ம் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெறும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு 2007ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வெளியானது. இந்த முடிவை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன.
முன்னதாக, 1990ம் ஆண்டு வி.பி. சிங் பிரதமராக இருந்த போது உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1991ம் ஆண்டு இடைக்கால உத்தரவை காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்தது.
காவிரி நீர் பகிர்வு
இடைக்கால உத்தரவுப்படி 250 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தமிழகத்திற்கு காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும். ஆனால் நடுவர்மன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீரை தரவில்லை. இதனிடையே நடுவர் மன்றம் 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி ஒரு இறுதி ஆணையை பிறப்பித்தது.
மேல்முறையீடு
இந்த உத்தரவின் படி, தமிழகத்திற்கு 419 டிஎம்சி தண்ணீரும், கர்நாடகத்திற்கு 270 டிஎம்சியும், கேரளா 30 டிஎம்சியும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சியும் தண்ணீர் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த முடிவை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன.
யாருக்கு அதிகாரம்
இந்த மனுக்கள் நிலுவையில் இருந்த நிலையில், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரிப்பதற்கு சுப்ரீம்கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை மத்திய அரசு என்று வாதிட்டது. காவிரி நடுவர் மன்ற முடிவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
தமிழக அரசு வாதம்
இந்நிலையில் இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வடகிழக்கு பருவமழை 67 சதவீதம் பொய்த்துவிட்டதால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருவதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
2000 கன அடி நீர் திறப்பு
இதனைத் தொடர்ந்து நாளொன்றுக்கு 2000 கன அடி நீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை இது தொடர வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பிப்.7 முதல் விசாரணை
காவிரி நதி நீர் தொடர்பான இந்த வழக்கு பிப்ரவரி 7ம் தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும், அந்தந்த மாநிலமும் தங்களது விளக்கங்களை 3 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.