தமிழக அரசின் பதில் மனுவுக்கு விளக்கம். தேமுதிக எம்எல்ஏக்களுக்கு அவகாசமளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி : சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் பதில் மனுவுக்கு விளக்கமளிக்க எம்எல்ஏக்களுக்கு காலஅவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோகன் ராஜ், சதீஷ்குமார், பார்த்திபன் உள்ளிட்ட 6 பேர் கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதாக கூறியும், பேரவைத் தலைவரை தாக்க முயற்சி செய்ததாக கூறியும், இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதனை எதிர்த்து 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், பேரவைத் தலைவர் தனபால், சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இடைநீக்கம் செய்யப்பட்ட 6 பேரும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், பேரவைத் தலைவரை தாக்க முயற்சி செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
எம்எல்ஏக்கள் இடைநீக்கம் சட்டத்திற்கு உட்பட்டு, உரிமைக் குழுவின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. சட்டப்பேரவை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. எம்எல்ஏக்களின் 6 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த பதில் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பதில் அளிக்க காலஅவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், செப்டம்பர் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையையும் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications