ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சிக்கு உத்தரவிட கோரும் மனு... விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம்கோர்ட்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையிலான மாநில அரசைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சிக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி புர்ஹான் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. கடந்த 2 வார காலமாக தொடர்ச்சியாக ராணுவத்துக்கும் காஷ்மீர் மக்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது.
இந்த மோதலில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ராணுவத்தினர் உட்பட 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அம்மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

பொதுநலன் மனு
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் நேசனல் பேந்தர்ஸ் பார்ட்டியின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது. ஆகையால் ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் சாசனத்தின் 92-வது பிரிவின் கீழ் ஆளுநர் ஆட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஹைகோர்ட்டுக்கு ஏன் போகலை?
இம்மனு தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தாக்கூர், நீதிபதிகள் கலிபுல்லா, கான்வில்கர் ஆகியோர் அடங்கிய இந்த பெஞ்ச், ஏன் ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தை நாடக் கூடாது என முதலில் கேள்வி எழுப்பினர்.

டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது; ஆகையால் அங்கு முறையிட முடியவில்லை எனக் குறிப்பிட்டார். மேலும் ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாநில அரசு தவறிவிட்டது; ஆகையால் மாநில அரசை கலைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

அடுத்த வாரம் விசாரணை
இதனைத் தொடர்ந்து இந்த மனு மீது விசாரணை நடத்த நீதிபதிகள் ஒப்புதல் தெரிவித்தனர். அடுத்த வாரம் இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெறும்.












Click it and Unblock the Notifications