காவிரியில் கலக்கும் கழிவு நீர்.. ஜுலைக்குள் அறிக்கை சமர்பிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கர்நாடகத்தில் இருந்து வரும் காவிரி நீரில் கழிவு நீர் கலப்பது தொடர்பான வழக்கில் அறிக்கை சமர்பிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : கர்நாடகத்தில் இருந்து வரும் காவிரி நீரில் கழிவு நீர் கலந்திருப்பதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஆய்வு செய்து ஜுலை மாதத்திற்குள் அறிக்கை சமர்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரில், கழிவுகள் கலந்திருப்பதாக கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது.

அந்த மனுவில், கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் காவிரி தண்ணீரில் பல்வேறு வகையான கழிவுகள் கலக்கப்படுவதாகவும், அதுபற்றி கர்நாடக அரசு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை. மேலும் நீரில் கலந்து வரும் மொத்த கழிவுகளில் சுமார் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே கர்நாடக அரசால் சுத்திகரிக்கப்படுகிறது. அதனால் அபாயகரமான கழிவுகளோடுதான் காவிரி நீர் தமிழகத்துக்கு வருகின்றது.
இதனால் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதனால் கர்நாடக அரசு தமிழகத்துக்கு ரூ. 2ஆயிரத்து 400 கோடி இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக கர்நாடக அரசை இடைத்தாக்கல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தனர். இந்நிலையில், கர்நாடக அரசு அளித்திருந்த அறிக்கையில், தமிழகத்திற்கு வரும் காவிரி நீரில் மாசு கலந்திருப்பதை ஏற்றுக்கொண்டது.
மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், காவிரியில் கழிவுகள் கலப்பது குறித்து தமிழக, கர்நாடக மாநிலத்தின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மே மாதம் இறுதி வரை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அந்த அறிக்கையை ஜுலை மாதம் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications