சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காதது அரசியல் சாசனத்திற்கு எதிரானது: சுப்ரீம் கோர்ட்
சபரிமலை கோயிலில் எதன் அடிப்படையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கபடுகிறது உச்ச நீதிமன்றம் கேள்வி
டெல்லி: சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் எதன் அடிப்படையில் சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளாவில் உள்ள உலகப் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது 10 வயது சிறுமிகளுக்கும் 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
சபரிமலை கோயிலில் பெண்கள் அனுமதி மறுக்கப்படுவது குறித்து எழும் விவாதங்கள் அவ்வப்போது கேரளாவிலும் இந்து மத பக்தர்களிடையேயும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.
இதைத்தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையில், இறைவழிபாடு என்பது ஆண்களை போல பெண்களுக்கும் பொருந்தும் என்றும், இதில் பாலின பாகுபாடு கூடாது என்றும் நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.
மேலும், சபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதி மறுப்பு என்பது சட்டத்திற்கு எதிரானது என்றும் எதன் அடிப்படையில் சபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி தீபக் மிஸ்ரா, கோயில் நடைதிறந்தால், யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்பதுதான் நியதி என்று கூறினார்.