வன விலங்குகளை கொல்ல அனுமதி: மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டெல்லி: விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் விலங்குகளை கொல்ல அனுமதி அளித்து உத்தரவிட்ட விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
விவசாய நிலங்களில் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதாகக் கூறி, நீலான் (நீல்கய்) மான்களை சுட்டுக் கொல்ல பீகார் அரசு மத்திய அரசிடம் கோரியது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து 6 நாட்களில் 200 நீலான் மான்கள் கொல்லப்பட்டன.
இதற்கு மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகாகாந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். விலங்குகளை கொல்ல உத்தரவிடும் விவகாரத்தில், மத்திய அமைச்சர்கள் மேனகா காந்திக்கும், பிரகாஷ் ஜவடேகருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
"பீகாரில் நீலான் மான்களை கொல்ல மத்திய அரசு அனுமதிக்கிறது. இது, இதுவரையில் கண்டிராத படுகொலை ஆகும். மேற்கு வங்கத்தில் யானைகள், ஹிமாசலப் பிரதேசத்தில் குரங்குகள், கோவாவில் மயில்கள், மகாராஷ்டிர மாநிலம், சந்திராபூரில் காட்டுப் பன்றிகள் ஆகிய வனவிலங்குகளைக் கொல்ல சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. பீகாரைப் பொருத்தவரை, சம்பந்தப்பட்ட கிராமத்தின் தலைவரோ, விவசாயிகளோ கூட நீலான் மான்களை கொல்ல வேண்டும் என்று விரும்பவில்லை.
என்று மேனகா காந்தி கூறினார்.
ஆனால் இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிக்கையில், "இது விலங்குகள் எண்ணிக்கை தொடர்பான அறிவியல் மேலாண்மை ஆகும். விலங்குகளை கொல்வதற்கான அனுமதி, குறிப்பிட்ட பகுதிகளில் குறித்த காலத்துக்கு மட்டும்தான்.
பீகாரில் நீலான் மான் கொல்லப்பட்ட விவகாரத்தை பொறுத்தவரை, விவசாயிகளின் பயிர்களுக்கு சேதம் ஏற்படுகிறபோது, மாநில அரசு அவற்றை கொல்வதற்கு அனுமதி கேட்கும் போது, நாங்கள் தற்போதைய சட்டத்தின்படி அனுமதி அளிக்கிறோம். ஆனால் அதுவும் குறிப்பிட்ட பகுதியில், குறித்த காலத்தில் மட்டும்தான். இது மத்திய அரசின் திட்டம் ஆகாது. சட்டம் அப்படித்தான் இருக்கிறது." என்றார்.
இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை நீதிபதிகள் கோயல் மற்றும் கான்வில்கார் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, மத்திய அரசின் அறிவிப்பாணைகளுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்தனர். மேலும் இந்த வழக்கின் மனுதாரர்கள், விலங்குகள் நலவாரியம் மற்றும் உரிமைகள் ஆர்வலர்கள் தங்களுடைய கவலைகளை மத்திய அரசிடம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
"நீங்கள் பிரதிநிதிகளை உருவாக்குங்கள். அவர்கள் இப்பிரச்சனையை கருத்தில் எடுத்துக் கொண்டு முடிவு எடுப்பார்கள். அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது," என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும் மனு மீதான விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.