மருத்துவ நுழைவுத் தேர்வு: மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்
டெல்லி: மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்து உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, முதல்கட்ட நுழைவுத்தேர்வு கடந்த மே 1-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட நுழைவுத்தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளித்து கடந்த மே 24-ம் தேதி மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இந்த அவசர சட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி, சமூக ஆர்வலர் ஆனந்த் ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் அனில் ஆர்.தாவே, சிவ கீர்த்தி சிங் மற்றும் ஆதர்ஷ் கோயர் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது.
அப்போது, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், 50 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்த நிலையில் நீதிமன்றம் தலையிட்டால் மேலும் குழப்பம் ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் நாடு முழுதும் 17 மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மாணவ மாணவியர் நுழைவு தேர்வு எழுதியுள்ள நிலையில் தற்போது அவசரச்சட்டத்துக்கு தடை விதித்தால் அது பெரும் குழப்பத்தில் கொண்டு போய் விடும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications