தெலுங்கானா: அனைத்து பொதுநலன் வழக்குகளும் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
டெல்லி: தெலுங்கானாவுக்கு எதிரான அனைத்து பொதுநலன் வழக்குகளும் உச்சநீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க ஒப்புதல் தெரிவித்த மத்திய அமைச்சரவை முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த பொதுநலன் வழக்குகள் இன்று நீதிபதிகள் டட்டு மற்றும் மதன் லோகுர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள், தற்போதைய சூழலில் தெலுங்கானா விவகாரத்தில் தலையிட முடியாது. தெலுங்கானா அமைப்பது என்று மட்டும்தான் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்த நிலையிலேயே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது ஏற்புடையது அல்ல. இது தொடர்பாக மாநில சட்டசபையோ நாடாளுமன்றமோ எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. அதனால் தெலுங்கானாவுக்கு எதிரான சட்ட ரீதியான கேள்விகள் உரிய நேரத்தில் தாக்கல் செய்யப்படும்போது வாதிடலாம் என்று கூறி அனைத்து பொதுநலன் மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.