ஒரு முடிவுக்காக போராடும் ஸ்ரீசாந்த்.. 4 வாரங்களில் பதிலளிக்க பிசிசிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: வாழ்நாள் தடைக்கு எதிராக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த மனு மீது 4 வாரங்களுக்குள் பதிலளிக்க பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த, கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின்போது மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஸ்ரீசாந்த்துக்கு, வாழ்நாள் தடைவிதித்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ஸ்ரீசாந்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என அவரை டெல்லி கோர்ட் விடுதலை செய்தது. ஆனாலல் பிசிசிஐ, ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்கவில்லை.
ஆச்சரியமடைந்த ஸ்ரீசாந்த் இது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். விசாரித்த ஹைகோர்ட் ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. பிசிசிஐ எடுத்த ஒழுங்கு நடவடிக்கையில் உயர்நீதிமன்றத்தால் குறுக்கிட இயலாது என்று கூறி, ஸ்ரீசாந்த் ஆயுட்கால தடையை நீக்கிய உத்தரவை நீதிமன்றம் திரும்ப பெற்றது. எனவே, கேரள ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீசாந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரணை செய்தது. வழக்கு குறித்து 4 வாரங்களில் பிசிசிஐ பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.