புதிய புயல் உருவாகிறது- வக்பு வாரிய சடத்துக்கு எதிரான வழக்குகள்- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. வக்பு சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தவெக உள்ளிட கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன.

முஸ்லிம்களின் வக்பு சொத்துகளை நிர்வகிக்கக் கூடியது வக்பு வாரியம். வக்பு வாரியத்தை நிர்வகிப்பதற்கான சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு, வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிந்துரைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவில், எதிர்க்கட்சிகள் முன்வைத்த அனைத்து பரிந்துரைகளும் நீக்கப்பட்டு, ஆளும் கூட்டணி கட்சிகளின் பரிந்துரைகள் மட்டும் ஏற்கப்பட்டு மீண்டும் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபா, ராஜ்யசபாவில் மிக கடுமையான ஆக்ரோஷமான விவாதங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையே இந்த சர்ச்சைக்குரிய வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு உடனடியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார். இதனால் வக்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில் மத்திய அரசின் வக்பு சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக, காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், நடிகர் விஜய்யின் தவெக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த பின்னணியில்தான் உச்சநீதிமன்றத்தில், வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை நடைபெற இருக்கிறது.












Click it and Unblock the Notifications